Thursday, October 13, 2011

தொழுகையை ‘களா’வாக ஆக்க முடியுமா?

இன்று பலரும் சர்வ சாதாரணமாகத் தொழுகைகளை அதற்குரிய நேரத்தில் தொழாமல் “களா’வாக ஆக்கிக் கொண்டி ருக்கின்றனர். ஒரு சில காரணங்களுக்காக தவிர வேறு எந்தக் காரணத்துக்காகவும் தொழுகையை “களா’வாக, ஆக்க முடியாது. அப்படி ஒரு நிலமை இஸ்லாத்தில் அறவே கிடையாது.

தூங்குபவன் விழிக்கும் வரையிலும், பைத்தியக்காரன், பைத்தியம் தெளியும் வரையிலும், சிறுவன் பருவமடையும் வரையிலும் (செய்கின்ற செயல்களுக்காக) விசாரிக்கப்பட மாட்டார்கள்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா(ரழி) நூல்கள்: அபூதாவூது, திர்மிதீ, அஹ்மத், நஸாயீ, இப்னுமாஜா, ஹாகிம்.

கடந்த காலங்களில் விடுபட்ட தொழுகைகளை எப்படி “களா’ செய்வது என்று கேட்டிருக்கின்றீர்கள். இது பற்றி விரிவாகவும் விளக்க மாகவும் சொல்ல வேண்டும்.

“களா’வாக ஆக்குவதையும், களா தொழுகையையும் அனுமதிப்பவர்கள் அதற்கு நேரடியான குர்ஆன் வசனத்தையோ, ஹதீஸையோ எடுத்துக் கூறவில்லை. மாறாக அவர்கள் நோன்பு பற்றி அல்லாஹ் கூறுகின்ற வசனத்திலிருந்து தான் களா தொழுகையை நியாயப்படுத்துகின்றனர்.

“பயணிகளாகவோ, நோயுற்றவர்களாகவோ நீங்கள் இருந்தால் அந்த நோன்பை வேறு நாட்களில் நோற்கலாம்” என்று அல்லாஹ் திருகுர்ஆனின் 2:185 வசனத்தில் குறிப்பிடுகிறான்.

ரமழானில் மட்டுமே நோற்க வேண்டிய நோன்பை, அந்த மாதத்தில் வைக்காதவர்கள் வேறு நாட்களில் நோற்கும்படி அல்லாஹ் அனுமதிக்கிறான். அதுபோல உரிய நேரத்தில் தொழப்படாத தொழுகைகளை வேறு நேரத்தில் தொழுது கொள்ளலாம் என்பது அவர்களின் வாதம்.

இந்த வாதம் எந்த விதத்திலும் சரியானதல்ல. நோன்பை வேறு மாதங்களில் நோற்கலாம் என்று கூறிய அல்லாஹ் தொழுகையை வேறு நேரத்தில் தொழலாம் என்று கூறுகின்றானா? என்றால் இல்லை. ஒரு இடத்திலும் கூறவில்லை.

மாறாக அல்லாஹ் பின் வருமாறு குறிப்பிடுகிறான்:

”மூமின்கள் மீது நேரம் குறிக்கப்பட்ட கடமையாக தொழுகை உள்ளது”. (அல்குர்ஆன் 4:103)

தொழுகையை அதற்கென குறிக்கப்பட்ட நேரத்தில் தான் தொழுதாக வேண்டும் என்று அல்லாஹ் தெளிவாகக் கூறிவிட்டதால் நோன்புடன் தொழுகையை ஒப்பிட முடியாது.

இன்னொரு வேறுபாட்டையும் நாம் காண்போம்.
“”மாதவிடாய்க் காலங்களில் நாங்கள் விட்டு விட்ட நோன்புகளை “”களா” செய்யும்படி நாங்கள் கட்டளை இடப்பட்டிருந்தோம். ஆனால் அதே காலங்களில் விடுபட்ட தொழுகைகளை “”களா” செய்யும்படி நாங்கள் ஏவப்படவில்லை”. அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா(ரழி) நூல்: முஸ்லிம்.

“”களா” விஷயத்தில் நோன்பும், தொழுகையும் வெவ்வேறானவை என்பதை இந்த ஹதீஸ் நமக்கு உணர்த்துகின்றது. நமது இஷ்டத்திற்கு காலம் கடத்திவிட்டு நாம் விரும்புகின்ற எந்த நேரத்திலாவது அதை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்ற நிலை இஸ்லாத்தில் அறவே கிடையாது.

இன்னொரு வேறுபாட்டைக் காண்போம்.
நோன்பு என்பது எல்லா மாந்தருக்கும் ஒரே மாதிரியாக செய்ய வேண்டிய கடமை.மாற்று முறை எதுவும் கிடையாது. அதனால் அதை நிறைவேற்ற இயலாத நோயாளிகளாக நோன்பை நோயுற்ற நாட்களில் நோற்க இயலாது போகலாம்.

ஆனால் தொழுகையைப் பொறுத்த வரை அந்த நிலமை இல்லை. நின்று தொழ முடியவில்லை என்று காரணம் கூறி காலதாமதப் படுத்த முடியாது.

“எனக்கு ஏற்பட்ட நோயின் காரணமாக (என்னால் தொழ முடியாமலிருப்பதைப் பற்றி) நபி(ஸல்) அவர்களிடம் நான் கேட்டேன் “”நின்று தொழு” அதற்கு இயலாவிட்டால் உட்கார்ந்து தொழு. அதற்கும் இயலாவிட்டால் படுத்துத் தொழு!” என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: இம்ரான் இப்னு ஹுஸைன்(ரழி) நூல்கள்: புகாரி, அபூதாவூது, அஹ்மத், இப்னுமாஜா, திர்மிதீ, நஸாயீ.

எனவே இயலாமையைக் காரணம் கூறி தொழுகையை களாவாக ஆக்க முடியாது. பயணத்திலிருப்பவன் பட்டினியாகப் பயணம் மேற்கொள்ள முடியாது என்பதால் நோன் புக்குச் சலுகை அளிக்கப்பட்டது. ஆனால் தொழுகையைப் பொறுத்து அந்த அனுமதி கிடையாது.

நான்கு ரகாஅத் தொழுகைகளை இரண்டு ரகஅத்களாக குறைத்துக் கொள்ளத்தான் அனுமதிக்கின்றான் அல்லாஹ். (அல்குர்ஆன் 4:101)

ஆக நோன்புக்கு இருப்பது போன்ற “களா’ என்பது தொழுகைக்குக் கிடையாது என்பதை நாம் தெளிவாக உணரலாம். மனித வாழ்வில் ஏற்படுகின்ற எந்தப் பிரச்சனைக்காகவும் தொழுகையைப் பிற்படுத்த முடியாது. போர்க்களத்தில் கூட ஒரு பிரிவினர் போர் செய்யும் போது, இன்னொரு பிரிவினர் தொழ வேண்டும். பின்னர் இவர்கள் போர் செய்யும் போது அவர்கள் தொழ வேண்டும் என்பதைத் திருகுர்ஆனின் 4:102 வசனம் குறிப்பிடுகின்றது. “களா’ செய்ய அனுமதி இருக்குமானால் இந்த இக்கட்டான கட்டத்தில் களா செய்ய இஸ்லாம் அனுமதித்திருக்கும். ஆனால் இந்தக் கட்டத்திலும் “களா’வை அல்லாஹ் அனுமதிக்கவில்லை.

பிரயாணம் செய்து கொண்டிருக்கும்போது, ஓர் இடத்தில் நின்று தொழுதால் எதிரிகளால் ஏதேனும் ஆபத்து வந்து விடுமென்று அஞ்சினால் அப்போதும் தொழுகையைக் களாவாக ஆக்க முடியாது. மாறாக நடந்து கொண்டோ, வாகனத்தில் பயணம் செய்து கொண்டோ தொழுதாக வேண்டும் என்பதை திருகுர்ஆனின் 2:239 வசனம் குறிப்பிடுகின்றது.

ஒளூ செய்வதற்குத் தண்ணீரைப் பயன்படுத்த இயலவில்லை என்றும் காரணம் கூறி களாவாக்க முடியாது. ஏனெனில் தண்ணீர் கிடைக்காதவர்கள் “தயம்மம்’ செய்து தொழும்படி திருகுர்ஆனின் 4:43 வசனம் கட்டளை இடுகின்றது.

பிரயாணம் செய்து கொண்டிருக்கும்போது எப்படியும் குறிப்பிட்ட தொழுகையை நிறைவேற்ற முடியாது போகும் என்றும் கூற முடியாது. லுஹரையும், அஸரையும் ஒரே நேரத்தில் மஃரிபையும், இஷாவையும் ஒரே நேரத்தில் களா இல்லாமலே தொழவும் இஸ்லாம் அனுமதிக்கின்றது.

ஆக எந்தக் காரணத்திற்காகவும் தொழுகையைக் களாவாக ஆக்க முடியாது. அப்படிக் காலம் கடந்து தொழுவதால், அது அந்தத் தொழுகைக்கு எந்த விதத்திலும் ஈடாக முடியாது.

“எவனுக்கு அஸர் தொழுகை தவறி விட்டதோ அவனது பொருளும், குடும்பமும் தவறிவிட்டது போன்றதாகும்” என்பது நபிமொழி. அறிவிப்பவர்: இப்னு உமர்(ரழி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்

இதிலிருந்து தவறியது தவறியதுதான். அதைத் திரும்ப அடைய முடியாது என்று உணரலாம். இவ்வாறு களாவாக்குவது மிகப் பெரும் குற்றம்தான். அல்லாஹ் மிக அதிகமாக வற்புறுத்துகின்ற ஒரு கடமையை வீணடித்தவனாக அவன் ஆகின்றான்.

நீண்ட காலமாகவோ,அல்லது சில வேளைகளோ தொழுகையை விட்டவன் என்ன செய்யவேண்டும்? இதற்குப் பரிகாரமே கிடையாதா? அதையும் அல்லாஹ் அழகாகச் சொல்லித் தருகிறான்.

“அவர்களுக்குப் பின்னால் தொழுகையை பாழ்படுத்தி, தங்கள் மனோ இச்சையைப் பின்பற்றியவர்கள் தோன்றினார்கள். அவர்கள் நரகில் போடப்படுவார்கள். (நடந்து விட்ட இந்த பாவத்துக்காக) திருந்தி மன்னிப்புக் கேட்டு நற்கருமங்களைப் புரிந்தவர்கள் தவிர (மற்றவர்கள் தான் நரகை அடைவர்) இவர்கள் சுவனத்தில் நுழைவார்கள்.” (அல்குர்ஆன் 19:59,60)

இப்படித் தொழுகையைப் பாழ்படுத்தியவர்கள் இனிமேல் இப்படிப் பழாக்க மாட்டோம் என்று மனம் திருந்தி செய்த தவறுக்காக மன்னிப்புக் கேட்கவேண்டும். அவர்கள் அந்த மாபெரும் குறையை நிவர்த்தி செய்வதற்காக இயன்ற அளவு நபிலான வணக்கங்களில் ஈடுபடவேண்டும்.

ஆக தொழுகையைக் களாவாக ஆக்குவதற்கு இஸ்லாம் அனுமதிக்கவுமில்லை. களாவாக ஆக்கி விட்டு வேறு நேரத்தில் தொழுவது அதற்கு ஈடாக ஆகவும் முடியாது. அதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.

“உமர்(ரழி) அப்துல்லாஹ் இப்னு உமர்(ரழி) ஸஃது இப்னு அபீ வக்காஸ்(ரழி) ஸல்மான் அல்பார்ஸி(ரழி) போன்ற நபிதோழர்களின் கருத்தும், முஹம்மது இப்னு ஸீரின்(ரஹ்) உமர் இப்னு அப்துல் அஸீஸ்(ரஹ்) போன்ற அறிஞர் களின் கருத்தும் இதுதானே” என்று இமாம் இப்னுஹஸ்மு(ரஹ்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். (நூல்: ஃபிக்ஹுஸுன்னா)

ஆரம்ப காலத்தில் களா செய்ய அனுமதிக்கப்பட்டிருந்தது. நபி(ஸல்) அவர்களும் நபி தோழர்களும் அவ்வாறு “களா’வாக ஆக்கி இருக்கின்றார்கள். பின்னர் அந்த அனுமதியை அல்லாஹ் ரத்துச் செய்துவிட்டான்.

அதற்கான ஆதாரம் வருமாறு:
“”அகழ்ப் போரின் போது, (அகழ்ப் போரில் ஈடுபட்டிருந்ததன் காரணமாக) லுஹர், அஸர், மஃரிபு ஆகிய தொழுகைகளை உரிய நேரத்தில் நபி(ஸல்) அவர்களும் நபி தோழர்களும் தொழவில்லை. இஷா நேரத்தில் வரிசைக் கிரமமாக பாங்கு, இகாமத்துடன் அந்தத் தொழுகைகளை நிறைவேற்றினார்கள்” இந்த நிகழ்ச்சி திருகுர்ஆனின் 2:239வது வசனம் இறங்குவதற்கு முன் நடந்ததாகும் என்று அபூஸயீது (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.(ஹதீஸின் கருத்து). நூல்கள்:அஹமது, நஸயீ.

“போர்க் காலங்களில் கூட உரிய நேரத்தில் தான் தொழ வேண்டும்” என்ற உத்தரவு வருவதற்கு முன்பு தான் இந்த நிலமை இருந்திருக்கின்றது என்பதை மேற்கூறிய ஹதீஸ் தெளிவாக்குகிறது.

இரண்டே இரண்டு காரணங்களினால் மட்டுமே, உரிய நேரம் தவறிய பிறகும் நிறைவேற்ற வேண்டும்.

“யாரேனும் மறதியின் காரணமாகவோ, அல்லது தூக்கத்தின் காரணமாகவோ, (உரிய நேரத்தில்) தொழத் தவறிவிட்டால் அவனுக்கு நினைவு வரும்போது, விழித்தவுடன் அதைத் தொழட்டும்!” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ்(ரழி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்

(இதே கருத்துக் கொண்ட பல ஹதீஸ்கள், புகாரி, முஸ்லிம் அபூதாவூது, நஸாயீ, இப்னு மாஜா, அஹ்மத் ஆகிய நூல்களில் காணப் படுகின்றன)

ஒருவன் தூங்கிவிட்டு தொழுகையின் நேரம் முடிந்த பிறகு எழுந்தான் என்றான், எழுந்த உடனே அதைத் தொழ வேண்டும். அது போல் மறதியின் காரணமாக ஒரு தொழுகையை நேரம் தவறவிட்டு விட்டால், நினைவு வந்தவுடன் தாமதிக்காது தொழுதிட வேண்டும் என்பதை நபி(ஸல்) தெளிவுபடுத்துகின்றார்கள். இந்த இரண்டு காரணங்கள் தவிர வேறு எந்தக் காரணங்களுக்காகவும் “களா’வாக ஆக்க முடியாது.

“நபி(ஸல்) அவர்களும், நபி தோழர்களும் பயணத்தில் செல்லும்போது ஓரிடத்தில் உறங்கி விடுகிறார்கள். உறங்குவதற்கு முன் பிலால் (ரழி) அவர்களை மட்டும் விழித்திருக்கும்படியும், சுபஹு தொழுகைக்கு எழுப்பும்படியும் கூறுகிறார்கள். பிலால்(ரழி) அவர்களும் தன்னை அறியாது உறங்கி விடுகிறார்கள். சூரியன் நன்றாக உதித்த பின்னர் தான் விழிக்கிறார்கள். எழுந்ததும் அவ்விடத்தை விட்டு அகன்று வழக்கம்போல பாங்கு சொல்லி சுன்னத் தொழுது பின்னர் இகாமத் சொல்லி ஜமா அத்துடன் தொழுதிருக்கிறார்கள்” (சுருக்கம்)
அறிவிப்பவர்: அபூ கதாதா(ரழி) நூல்கள்: அஹ்மத், முஸ்லிம்

(நஸாயீயிலும் இதே கருத்து பதிவு செய்யப் பட்டுள்ளது)

தூக்கம் மறதியின் காரணமாக விட்டுவிட்ட தொழுகைகளைத் தாமதமின்றி விழித்தவுடன், நினைவு வந்தவுடன் தொழுதிட வேண்டும். உரிய நேரத்தில் தொழும்போது எப்படி பாங்கு, இகாமத், சுன்னத்களுடன் தொழ வேண்டுமோ அவ்வாறே அதனை நிறை வேற்றவும் வேண்டும். அந்தத் தொழுகைக் குரிய நேரம் அதுதான் என்றாகி விடும்போது, களா என்ற பிரச்சனையே இல்லை.

ஆக கடந்த காலங்களில் தொழுகைகளை விட்டது மிகப் பெரும் பாவம். இணை வைத்தலுக்கு அடுத்தபடியாக பெரும் பாவம். மிகப் பெரும் பாவத்திற்கு எப்படி உள்ளம் உருகி பாவமன்னிப்புக் கோர வேண்டுமோ அவ்வாறு பாவ மன்னிப்புக் கோருவதும், உபரியான வணக்கங்கள் புரிவதும் தான் அதற்குப் பரிகாரம். மேற்கூறிய இரண்டு காரணங்கள் தவிர வேறு காரணங்களால் தொழுகையைத் தாமதப்படுத்தக் கூடாது.

அல்லாஹ் மிகவும் அறிந்தவன்.

அந்நஜாத்

சின்னஞ்சிறிய விஷயங்கள் தான் ஆனாலும்……

மனிதன் சபல புத்தியுடையவனாகவும், பலகீனமாகவும் படைக்கப்பட்டுள்ளான். அதே சமயம் அவனது சுய புத்தியில் அபார நம்பிக்கையுடையவனாகவும் இருக்கின்றான். தன் புத்தியில் நல்லவையாகப்படுபவை அனைத்தையும் உறுதியாக நம்பி செயல்பட ஆரம்பித்து விடுகிறான். அவனின் இந்தச் செயல்பாடுகளின் பலனை இந்த உலகில் பார்ப்ப முடிவதில்லையே! நாளை மறுமையில் பார்க்க வேண்டிய நிலையில் இருக்கின்றான். 100 வயது கிழவனாக இருந்தாலும் தனது அனுபவத்தின் மூலம் இவ்வுலகில் அச்செயல்பாடுகளின் உண்மை நிலைகளை அறிந்துக் கொள்ள முடியாதே என்பதை எல்லாம் அவன் சிந்திப்பதில்லை. அதனை சிந்தித்துணரும் ஆற்றல் அவனுக்கில்லை. அதனையே அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகிறான் .

நீங்கள் ஒரு பொருளை வெறுக்கலாம்; ஆனால் அது உங்களுக்கு நன்மை பயப்பதாக இருக்கும்; ஒரு பொருளை விரும்பலாம். ஆனால் அது உனக்கு தீமை பயப்பதாக இருக்கும். (இவற்றையெல்லாம்) அல்லாஹ் அறிவான், நீங்கள் அறியமாட்டீர்கள். (2:216)

எனவே மார்க்க விஷயத்தில் அவனது சுய சிந்தனையைத் தூக்கி எறிந்து விட்டு அல்லாஹ்வின் கட்டளையை அப்படியே செயல்படுத்தினால் மட்டுமே அவனுக்கு மறுமையில் வெற்றியுண்டு.

ஆதம்(அலை) அவர்கள் மனித வர்க்கத்தினரிலே ஓரளவு மறு உலக அனுபவம் பெற்றவர்கள், சுவர்க்கத்தில் வாழ்ந்தவர்கள் ஷைத்தானின் சேட்டைகளை நேரடியாகக் கண்டு அவற்றின் விளைவுகளையும் அனுபவித்து பெரும் துன்பப்பட்டு சீரழிந்து பின் சீர் பெற்றவர்கள். அப்படிப்பட்ட ஆதம்(அலை) அவர்களைக் கூட இவ்வுலகில் வந்து தன் சுயபுத்தியைக் கொண்டு நல்லது கெட்டதைத் தீர்மானித்து வாழும்படி அல்லாஹ் அனுமதிக்கவில்லை; தனது வழிகாட்டலின்படி மட்டுமே இவ்வுலகில் வாழ வேண்டும். அப்படி வாழ்பவர்கள் மட்டுமே வெற்றி பெற முடியும். அவர்களுக்குப் பயமோ துக்கமோ இல்லை. அதற்கு மாறாக அல்லாஹ்வின் வழிகாட்டலை விட தங்களின் சொந்த புத்திக்கு முக்கியத்துவம் கொடுத்து இவ்வுலகில் வாழ்பவர்கள் தோல்வியடைந்து நரகைச் சேர்வார்கள். அதில் என்றென்றும் தங்கி விடுவார்கள் என அல்லாஹ் தெளிவாகவே அறிவித்து விட்டான். அவ்வசனங்கள் வருமாறு:

(பின்பு) நாம் சொன்னோம்: “நீங்கள் அனைவரும் இவ்விடத்தை விட்டும் இறங்கி விடுங்கள்; என்னிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக நல்வழி(யைக் காட்டும் அறிவுரைகள்) வரும்போது, யார் என்னுடைய (அவ்)வழியைப் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு எத்தகைய பயமும் இல்லை, அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.” (2:38)

அன்றி யார் (இதை ஏற்க) மறுத்து, நம் அத்தாட்சிகளைப் பொய்ப்பிக்க முற்படுகிறார்களோ அவர்கள் நரகவாசிகள்; அவர்கள் அதில் என்றென்றும் தங்கி இருப்பர். (2:39)

அல்லாஹ்வின் இந்தத் தெளிவான உத்திரவுகளை தலைமேற்கொண்டு ஆதத்தின் சந்ததிகள் செயல்பட்டிருந்தால் அது எவ்வளவோ நல்லதாக அமைந்திருக்கும். இவ்வுலகில் பல மதங்கள் தோன்றியிருக்கா. மனிதரில் பிரிவுகள் ஏற்ப்பட்டிருக்கா ஆனால் அதற்கு மாறாக மார்க்க விஷயத்தில் தனது சொந்த புத்தியைச் செலுத்தி சீரழிந்து வருகிறான் மனிதன். அதன் விளைவு மனிதனை தெய்வமாக்குவதும். தெய்வத்தை மனிதனாக்குவதும் சர்வசாதாரண நிகழ்ச்சியாக ஆகி விட்டது மனித வாழ்க்கையில், இக்கைங்கர்யத்தை வெகு சிரத்தையுடன் கடைப்பிடிப்பதோடு மக்களுக்கு அயராது போதித்து வருகிறவர்கள் பூசாரிகள், புரோகிதர்கள், பாதிரிகள், சந்நியாசிகள், மவ்லவிகள் ஆகும். இவர்கள் அனைவரும் அல்லாஹ்வுக்கும் அடியானுக்குமிடையில் இடைத்தரகர்களாக இருந்து வயிறு வளர்ப்பதுடன் மக்களை அல்லாஹ்வின் நேரியப் பாதையிலிருந்து வழி கெடுத்து அத்வைதம் என்று சொல்லப்படும் இறைவனையும் மனிதனையும் அதாவது படைத்தவனையும், படைக்கப்பட்டவனையும் ஒன்றாக்கும இணை வைக்கும் மாபாதகச் செயலை செய்ய வைத்து மனித வர்க்கத்தையே நரகில் கொண்டு சேர்த்து நரகை நிரப்பகின்றனர். இவர்கள் அனைவரும் இது விஷயத்தில் ஷைத்தானின் ஏஜண்டுகளாக இருந்து செயல்பட்டு வருகின்றனர்.

மக்களில் பெரும்பான்மையினர் செம்மறியாட்டுக் கூட்டம் போல் இந்தக் கயவர்களின் பின்னால் கண்ணை மூடிக் கொண்டு சென்று நரகப் படுகுழியில் வீழ்ந்து தங்களை அழித்துக் கொள்கின்றனர். இதனை அல்லாஹ் இவ்வாறு கூறி நம்மை எச்சரிக்கின்றான்.

“ஈமான் கொண்டவர்களே! நிச்சயமாக (அவர்களுடைய) பாதிரிகளிலும், சந்நியாசிகளிலும் அநேகர் மக்களின் சொத்துக்களைத் தவறான முறையில் சாப்பிடுகிறார்கள்; மேலும் அல்லாஹ்வின் பாதையை விட்டும் (மக்களைத் ) தடுக்கிறார்கள். (9:34)

இந்த வசனத்தில் பாதிரிகளைப் பற்றியும் சந்நியாசிகளைப் பற்றியும் மட்டும் கூறி இருந்தாலும் இடைத்தரகர்கள் அனைவரது நிலையும் அப்படித்தான் என்பது சொல்லாமலே அனைவருக்கும் விளங்கும். இந்த அடிப்படையில் அதிகமான மக்கள் வழிகேட்டில் தான் இருப்பார்கள். இதற்கு குர்ஆன் கூறும் சான்று இதோ

பூமியில் உள்ளவர்களில் பெரும்பாலோரை நீர் பின்பற்றுவீரானால் அவர்கள் உம்மை அல்லாஹ்வின் பாதையை விட்டு வழிக்கெடுத்து விடுவார்கள். (ஆதாரமற்ற) வெறும் யூகங்களைத்தான் அவர்கள் பின்பற்றுகிறார்கள். இன்னும் அவர்கள் பொய்யான கற்பனையிலேயே மூழ்கி கிடக்கிறார்கள். (6:116)

மக்களில் பெரும்பாலோர் வழிகேட்டில் இருக்கும் நிலையில் அழைப்புப் பணியில் ஈடுபடுவோர் எப்படிப்பட்ட தவறான சிந்தனையில் இருக்கிறார்கள் என்பதை இனி ஆராய்வோம்.

அழைப்புப் பணியில் ஈடுபடுபவர்களின் அசல் நோக்கம் மறுமையாக அல்லாஹ்வை திருப்திப் படுத்துவதாக இருந்தால் மக்கள் சத்தியத்தை மறுப்பதைக் கொண்டு விசனப்படாமல், அவர்கள் ஏற்றுக் கொள்ளும வகையில் நாம் செயல்பட வேண்டும் என்ற தப்பான முடிவுக்கு வராமல் சத்தியத்தை உள்ளது உள்ளபடி சொல்லிக் கொண்டே இருப்பார்கள். மக்கள் அனைவரும் அவர்களை ஒதுக்கித் தள்ளினாலும் அதனால் கவலைப்பட மாட்டார்கள். தங்களைப் பின்பற்றும் ஒரு நபர் கூட இல்லாத நிலையிலும் தனது பணியை செவ்வனே செய்த பல நபிமார்கள் அல்லாஹ்வின் திருப்தியுடன் சுவர்க்கம் நுழைவார்கள் என்ற நபிமொழியின் கருத்தை மனதில் கொண்டு உறுதியுடன் சத்தியத்தில் நிலைத்திருப்பார்கள்.

ஆனால் அதற்கு மாறாக மறுமையை குறிக்கோளாக கொள்ளாமல் இவ்வுலகில் பதவிகளையோ புகழையோ, பொன்னையோ பொருளையோ குறிக்கோளாகக் கொண்டு மார்க்க பிரசாரத்தில் ஈடுபடுகிறவர்கள் தங்கள் குறிக்கோள்கள் நிறைவேற மக்களின் திருப்தியைப் பெறவே குறியாக இருப்பார்கள் என்பதில் சந்தேகமிருக்க முடியாது. இது மனித இயல்பு. இதனை விட்டும் அல்லாஹ்வால் பாதுகாக்கப்பட்டவர்களைத் தவிர வேறு யாரும் தப்ப முடியாது. இதுப் பற்றி நபி(ஸல்) அவர்களையே அல்லாஹ் இவ்வாறு எச்சரிக்கின்றான்.

(நபியே!) தீயவை அதிகமாக இருப்பது உம்மை ஆச்சர்யப் படுத்தியபொழுதிலும் “தீயதும், நல்லதும் சமமாகா; எனவே, அறிவாளிகளே! அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்துக் கொள்ளுங்கள். அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்.” என்று நீர் கூறுவீராக” (5:100)

மேலும் மனிதர்களின் சில விருப்பங்களை ஏற்றுக் கொள்ளும் போது அவர்கள் நம்மை தங்கள் உற்ற நண்பர்களாக ஆக்கிக் கொள்வார்கள். மக்களின் ஆதரவு அமோகமாக கிடைக்கம். அதே சமயம் அதன் பின் விளைவு மகா பயங்கரமானது என்பதை அழைப்புப் பணியாளர்கள் உணர வேண்டும். அது குறித்து அல்லாஹ் நபி(ஸல்) அவர்களையே எச்சரித்துள்ள வசனங்கள் வருமாறு:

(நபியே!) இன்னும் நாம் உமக்கு வஹீ மூலம் அறிவித்தோமே அதை விட்டும், அதல்லாததை நம்மீது நீர் இட்டுக்கட்டி கூறும்படி உம்மைத் திருப்பி விடவே அவர்கள் முனைந்தார்கள்; (அவ்வாறு நீர் செய்திருந்தால்) உம்மை தம் உற்ற நண்பராகவும் அப்போது எடுத்துக் கொண்டிருப்பார்கள்.

மேலும், நாம் உம்மை (ஹக்கான பாதையில்) உறுதிப்படுத்தி வைத்திருக்கவில்லை எனின் நீர் கொஞ்சம் அவர்கள் பக்கம் சாய்ந்து போயிருத்தல் கூடும்.

(அவ்வாறு நீர் சாய்ந்திருந்தால்) நீர் இவ்வாழ்நாளில் இரு மடங்கு (வேதனையும்) நுகருமாறு நாம் செய்திருப்போம்; பின்பு, நமக்கு எதிராக உதவியாளர் எவரையம் நீர் காணமாட்டீர். (17:73-75)

ஆக குர்ஆனின் இந்த எச்சரிக்கைகளை எல்லாம் கூர்ந்து அவதானித்து செயல்படும் சத்திய பிரச்சாரங்கள் எந்த நிலையிலும் மக்கள் கோபப்படுகிறார்கள், தனது சொல்லை செவிமடுக்க மறுக்கிறார்கள். என்ற காரணத்திற்காக உள்ளதை உள்ளபடி சொல்லுவதிலிருந்தும் பின்வாங்க முடியாது. மக்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் சிலதை விட்டு சிலதை சொல்லும் ஷைத்தானின் துர்போதனைக்கு ஆளாக மாட்டார்கள். இவர்கள் புத்தியில் சிறிய விஷயங்களாக படுபவற்றையெல்லாம் சொல்லாமல் விட்டு, இவர்கள் புத்தியில் பெரிய விஷயமாகப் படுபவற்றை மட்டும் சொல்லும் குற்ற செயல்களுக்கு ஆளாக மாட்டார்கள். அதாவது மார்க்கப் பிரசாரத்தில் தங்கள் மனித புத்தியை நுழைக்க மாட்டார்கள். விளைவுகள் தங்களின் சொந்த முயற்சிகளிலும் தங்களின் அனுமானங்களிலும் தங்கி இருக்கின்றன என தப்புக் கணக்குப் போடமாட்டார்கள். விளைவைப் பற்றி அக்கறைப்படாமல் அல்லாஹ்வின் உத்திரவுகளை எடுத்து வைப்பதே எமது கடமை என்பதை செவ்வனே உணர்ந்து செயல்படுவார்கள்.

“இன்னும் எங்கள் கடமை (இறைவனின் தூதுச் செய்தியை) விளக்கமாக எடுத்துச் சொல்வதைத் தவிர வேறில்லை” (36:17)

இந்த அல்லாஹ்வின் தெளிவான கட்டளையை சிரமேற்கொண்டு குர்ஆனிலும் ஹதீஸிலும் இருப்பதை மக்கள் முன் எடுத்து வைப்பதை விட வேறு அதிகாரம் தங்களுக்கில்லை என்பதை உணர்ந்து செயல்படுவார்கள். தங்கள் மனிதப் புத்தியைக் கொண்டும், அனுமானங்களைக் கொண்டும் மார்க்கப் பிரசாரத்தை திறம்பட செயல்படுத்த முடியும் என்ற அல்லாஹ்வை மறந்த எண்ணத்தை அதிக பிரசிங்கித் தனத்தை ஒரு போதும் மேற்க்கொள்ள மாட்டார்கள். அல்லாஹ் யாரை நேர்வழியில் செலுத்துகிறானோ அவர்களால் மட்டுமே இவை அனைத்தும் சாத்தியமாகும்.

இது விஷயத்தில் யார் அல்லாஹ்வின் அருளைப் பெறவில்லையோ அவர்கள் மட்டும் அல்லாஹ்வை மறந்து தங்கள் சொந்த புத்தியைக் கொண்டும் மக்களின் ஆதரவைக் கொண்டும் சாதித்து விட முடியும் என்ற நச்சுக் கருத்துக்கு ஆளாவார்கள். தங்கள் சொந்த புத்தியில் உதித்ததை செயல்படுத்துவது கொண்டு மக்களில் ஒரு கூட்டம் அவர்களை நம்பி, அவர்கள் பின்னால் வர ஆரம்பித்து விட்டால், அவர்கள் தாங்கள் பெரிதாக சாதித்து விட்டதாக மனப்பால் குடிப்பார்கள். நேர்வழியில் இருக்கும் வரை கூட்டம் குறைவாக இருக்கும் நிலைமாறி, வழிதவறி விட்டால், பெருங்கூட்டம் பின்னால் வர ஆரம்பித்து விடும் என்ற உண்மையை 6:116 வசனத்தின் பொருளை உணரத்தவறி விடுகிறார்கள்.

மக்கள் நமது கருத்துக்களை ஆர்வமாகக் கேட்டு ஏற்றுக் கொள்கிறார்கள். கூட்டம் கூட்டமாக நம் பின்னால் வருகிறார்கள் என்பதெல்லாம் நாம் நேர்வழியில் நடக்கின்றோம் என்பதற்கு உரைகல் அல்ல. பயித்தியக்காரன் பின்னாலும் ஒரு கூட்டம் செல்லத்தான் செய்யும். இன்று வழிகேட்டின் உச்சக் கட்டத்தில் இருப்பவர்களின் பின்னால் தான் பெருங் கூட்டங்கள் இருக்கின்றன. நாம் நேர்வழியில் இருக்கிறோம் என்பதற்கு சரியான அளவுகோல் குர்ஆனும், ஹதீஸும் ஆகும். அவை எடுத்துச் சொல்லுபவை சிறிய விஷயங்களாக இருந்தாலும் பெரிய விஷயங்களாக இருந்தாலும் சிறிது பெரிது என நாமாக அலட்டிக் கொள்ளாமல் மக்கள் முன் எடுத்து வைப்பதே பிரசாரகனின் கடமையாகும். நமது கடமைகளைச் செவ்வனே செய்யும் உண்மை பிரசாரர்களாக அல்லாஹ் நம்மை ஏற்று அருள் புரிவானாக.

Saturday, September 17, 2011

மஸ்ஜிதுகள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தம்

மஸ்ஜிதுகள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தம் என நெற்றிப் பொட்டில் அடிப்பது போல் எச்சரிப்பதைக் கண்டு கொள்ளாமல் தங்கள் தங்கள் சுய பெயர்களில் பதிவு செய்து ஆதிக்கம் செய்கின்றனர். அல்லாஹ்வின் தெளிவான இந்தக் கட்டளையைப் புறக்கணித்து ஒவ்வொரு பிரிவாரும் அல்லாஹ்வின் பள்ளிகளைக் கூறுபோட்டுள்ளனர். மற்றவர்களின் சொத்துக்களைப் போலிப் பத்திரங்கள் தயாரித்து தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொண்டவர்கள் படுகிறபாடுகளை இப்போது ஊடகங்களில் பார்த்து வருகிறோம் அல்லவா? இங்கு கூட தங்களின் பண பலம் அரசியல் செல்வாக்குக் கொண்டு தண்டனையிலிருந்து சிலர் தப்பி விடலாம்.

ஆனால் அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தமான பள்ளிகளை போலிப் பத்திரங்கள் மூலம் ஆதிக்கம் செய்து, அட்டூழியம் செய்கிறவர்கள் நாளை மறுமையில் அல்லாஹ்விடம் தப்ப முடியுமா? ஒருபோதும் தப்ப முடியாது. அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தமான பள்ளிகளை இந்த அறிவீனர்கள் கூறு போட்டு ஆதிக்கம் செலுத்தி வருவது உண்மை தான். ஆயினும் நேர்வழி நடக்கும் முஸ்லிம்களின் கடமை என்ன? இதற்கு நபி(ஸல்) அவர் கள் 33:21 கூறுவது போல் வழிகாட்டவில்லையா? நிச்சயம் வழிகாட்டி இருக்கிறார்கள். அல்லாஹ்வின் வீடான கஃபதுல்லாஹ் முஷ்ரிக்குகளிலும் மிகக் கொடிய முஷ்ரிக்குகளான தாருந்நத்வா மதகுருமார்கள் கையில் சிக்கி இருந்தது. அங்கு எண்ணற்ற சிலைகளும், சமாதிகளும் நிறைந்து காணப்பட்டன.

இந்த நிலையிலும் நபி(ஸல்) அங்கு சென்று தான் அல்லாஹ்வைத் தொழுதார்கள். அப்போது அந்த தாருந்நத்வா குருகுல மடத்தின் தலைமை இமாமாகவும் அந்த மக்களால் அபுல் ஹிக்கம்-ஞானத்தின் தந்தை எனப் போற்றப்பட்ட, நபி(ஸல்) அவர்களால் அபூ ஜஹீல்- மடமையின் தந்தை என அடையாளம் காட்டப்பட்டவனும், இந்த அபூ ஜஹீலின் தோழர்களும் நபி(ஸல்) கஃபாவில் அல்லாஹ்வைத் தொழும்போது பெரும் துன்பங்களைக் கொடுத்தார்கள்.

ஒரு சமயம் நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ் தொழுது கொண்டிருக்கும்போது அவர்கள் மீது அழுகிய ஒட்டகக் குடலை அபூ ஜஹீல் வகையறாக்கள் போட்டதால் நபி(ஸல்) மூச்சுத் திணறி பெரும் துன்பத்திற்கு ஆளானார்கள். அந்த காஃபிர்களோ கைகொட்டிச் சிரித்து மகிழ்ந்தார்கள் என்ற வரலாற்றைப் பார்க்கிறோம்.

இதிலிருந்து நாம் பெறும் படிப்பினை என்ன? கஃபதுல்லாஹ் எண்ணற்ற சிலைகளைக் கொண்டும், சமாதிகளைக் கொண்டும் நிரப்பப் பட்டிருந்தாலும் அது அல்லாஹ்வின் வீடு என்பதில் எவ்வித மாற்றமும் பெறவில்லை. அதனால் தான் நபி(ஸல்) அங்கு சென்று மிகமிக ஆபத்தான, துன்புறுத்தல்கள் நிறைந்த நிலையிலும் அல்லாஹ்வைத் தொழுது தமது உம்மத்திற்கு வழி காட்டி இருக்கிறார்கள். சிலைகளும், சமாதிகளும் இருக்கும் நிலையிலேயே மதீனாவிலிருந்து கஃபாவை நோக்கியே தொழுதார்கள். இது இறைவனின் கட்டளையாகும்.

அதேபோல் அல்லாஹ்வின் பள்ளிகளைக் கூறு போட்டு அவரவர்கள் பெயர்களில் பதிவு செய்து பித்அத், குஃப்ர், ´ஷிர்க் போன்ற அட்டூழியங்களை நடைமுறைப்படுத்தி வந்தாலும் அவை அல்லாஹ்வின் பள்ளிகள் என்ற நிலையிலிருந்து மாறப் போவதில்லை.

எனவே நபி(ஸல்) அவர்கள் காட்டித் தந்த அழகிய முறைப்படி நேர்வழி நடக்க விரும்பும் முஸ்லிம்கள் அப்பள்ளிகளில் சென்று அல்லாஹ்வைத் தொழுவதே சமுதாய ஒற்றுமைக்கு வழி வகுக்கும். அவர்கள் எவ்வளவு பெரிய ´ஷிர்க், பித்அத்களில் மூழ்கி இருந்தாலும், அடிப்படை விஷயங்களில் தொழுகையில் நபி(ஸல்) காட்டித் தந்ததையே பின்பற்றுகின்றனர். ஐங்கால தொழுகைகளில், ரகாஅத்களில், ருகூஃ, சுஜூதுகளில், இருப்பில் நபி(ஸல்) காட்டித் தந்தபடிதான் செய்கின்றனர். 39:17,18 இறைக் கட்ட ளைகள்படி அவர்கள் செய்யும் இந்த அழகானவற்றில் நேர்வழி நடக்க விரும்பும் முஸ்லிம்கள் பின்பற்றுவதில் குர்ஆன், ஹதீஸுக்கு முரண்பட்ட செயல் ஒன்றுமில்லை.

ஒருவருடைய சுமையைப் பிரிதொருவர் சுமக்க மாட்டார் என்று குர்ஆன் 6:164, 17:15, 35:18, 39:7, 53:38 போன்ற பல இடங்களில் அல்லாஹ் நேரடியாகக் கூறியுள்ளான். தொழவைக்கும் இமாமின் பித்அத், குஃப்ர், ´ஷிர்க் காரணமாக அவரின் தொழுகை அவரது முகத்தில் எறியப்பட்டாலும், அவர் பின்னால் தொழும் நேர்வழி நடக்கும் முஸ்லிம்களின் தொழுகையில் அணுவளவு கூட குறைவு செய்ய மாட்டான் அல்லாஹ்.

அவர்கள் பின்னால் நின்று தொழக்கூடாது என்று சட்டம் சொல்லும் மதகுருமார்கள் 9:31, 42:21, 49:16 வசனங்களின் வழிகாட்டல்படி தர்கா, மத்ஹபினரை விட கொடிய ´ஷிர்க் செய்கிறவர்களாகவே இருக்கிறார்கள். காரணம் முன்னவர்கள் அல்லாஹ்வுக்கும் தங்களுக்குமிடையில் முன் சென்ற இமாம்கள், வலிமார்கள் போன்றோரை வசீலாவாக-இடைத்தரகர்களாக மட்டுமே ஆக்குகிறார்கள்.

இவர்களோ அல்லாஹ் விதிக்காத சட்டங்களை விதித்து 42:21 வசனப்படி அல்லாஹ்வுக்கே இணையாளர்களாக ஆகிறார்கள். 21:92, 23:52 இறைக் கட்டளைக்கு முரணாகச் சமுதாயத்தைப் பிளவுபடுத்துகிறார்கள். தீர்ப்பை மறுமைக்கென்று அல்லாஹ் ஒத்தி வைத்திருக்காவிட்டால் இங்கே அவர்களுக்கு மிகக் கடுமையான தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்கும்; தீர்ப்பு மறுமையில் என்றிருப்பதால் இவ்வுலகில் அவர்கள் விருப்பப்படி 9:34 வசனம் கூறுவது போல் மக்கள் சொத்துக்களைத் தவறான முறைகளில் சாப்பிடுகிறார்கள். 49:16 வசனத்தில் அல்லாஹ் கூறுவது போல் அல்லாஹ்வுக்கே மார்க்கத்தைக் கற்றுக் கொடுக்க முற்படுகிறார்கள்.

குர்ஆன், ஹதீஸ் மட்டுமே மார்க்கம் என வாய் கிழியப் பேசும் இவர்கள் குர்ஆன், ஹதீஸ்படி நடப்பதில்லை என்பதே உண்மை. ஈமானுக்கு அடுத்து அடிப்படையான ஐங்காலத் தொழுகைகளையே உள்ளச்சத்தோடு, பேணுதலோடு அன்றாடம் தவறாமல் ஜமாஅத் தோடு சேர்ந்து தொழாத இவர்கள் வேறு எந்த மார்க்க விஷயங்களில் குர்ஆன், ஹதீஸைப் பின்பற்றப் போகிறார்கள்?

அல்லாஹ்வுக்குச் சொந்தமான பள்ளிகளை 18:28, 20:16, 25:43, 28:50, 38:26, 45:23, 79:40,41 இத்தனை இறைவாக்குகளில் மனோ இச்சைப் பற்றி எச்சரித்திருந்தும் அவற்றைக் கண்டு கொள்ளாமல் நிராகரித்து விட்டு தங்கள் மனோ இச்சை சரிகாணும் பெயர்களில் பத்திரப் பதிவு செய்து அபகரித்துக் கொண்டாலும் அவை அல்லாஹ்வின் பள்ளிகள்தான். இது அன்று குறைஷ் குஃப்பார்கள் அல்லாஹ்வின் வீடான கஃபதுல்லாஹ்வை அபகரித்து வைத்திருந்த செயலுக்கு ஒப்பானதாகும்.

மழை கற்றுத்தரும் பாடம்

உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் அமைதி நிலவட்டுமாக….

நாம் இந்த பதிவில் எடுத்திருக்கும் தலைப்பு மழை, வெய்யிலில் தெரியும் நிழலின் அருமை அது போன்று வானம் பார்த்த பூமியை கேட்டால் தெரியும் மழையின் அருமை.


சரி முதலில் மழை (Rain) எவ்வாறு உருவாகிறது என்று நாம் பாப்போம்.
வெப்பத்தின் காரணமாக கடல்கள், ஏரிகள், ஆறுகள் போன்றவற்றிலிருந்து எடுக்கப்படும் நீர் திரவ நிலையிலிருந்து நீராவி நிலைக்கு மாறி காற்றில் கலந்து மேல் சென்று பின்பு மேகங்களை உருவாக்குகின்றன. இதுவே பிறகு சுத்தமான நீர் மழையாக பெய்கிறது. அது அதோடு நின்று விடாமல் அந்த நீர் திரும்பவும் நீராவி ஆகி இப்படி ஒரு சுழற்சியாக நடைபெறும் இந்த நிகழ்வை நீர் சுழற்சி (The Water Cycle) என்று குறிப்பிடுவர்.

மழை பெய்வதினால் உயிரினங்களுக்கு பலவகையான நன்மைகள் உள்ளன, மழை உயிர் வாழ்வதற்கான ஆதாரம், ஆனால் இந்த மழை சிலகாலம் இல்லையெனிலும் உணவு பற்றாக்குறை போன்ற பல இன்னல்களை நாமே கண்ணெதிரே பார்க்கிறோம். மழை என்பதே இல்லையெனில் அதனால் ஏற்படும் தீமைகள் என்னவென்று சொல்லதேவை இல்லை அனைவரும் அறிந்ததே உயிரினங்கள் வாழவே முடியாத அளவிற்கு பூமியின் வெப்பம் அதிகமாகிவிடும். ஒரு பக்கம் முழுவதும் வெப்பமாகவும் ஒரு பக்கம் முழுவதும் கடல் நீராகவும் இருக்கும், அதாவது தற்போது இருக்கும் படியான சமநிலை படுத்தப்பட்ட பூமி இருக்கவே இருக்காது.

உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் நீரில் மூழ்கி அழியவும் கூடாது ஆனால் அவை அனைத்திற்கும் இன்றி அமையாத தேவைக்காக நீரும் தரப்படவேண்டும் என்ற நிலையில் இந்த மழையை தவிர வேறு எது சிறந்த வழி என்னவென்று கூறுங்கள் பாப்போம். இது ஏனோ தானோ வென்று நடைபெறுகிறது என்ற சந்தேகமின்றி அனைத்தும் தீர திட்டமிட்டே நடைபெறுகிறது.

இது உண்மையில் மாபெரும் சக்தியின் உன்னதமான அருட்கொடை என்பதை சந்தேகமின்றி என்று கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் மேலே செல்வோம்.

கடவுள் மறுப்பாளர்கள் கூற்றுப்படி முதல் மழை எப்படி பெய்திருக்கவேண்டும், இயற்கையாக (!?) உருவான ஆக்சிஜன் ஹைட்ரஜன் மூலக்கூறுகள் தானாக ஒன்றிணைந்து நீர்த்துளி உருவாகி பின் ஒவ்வொரு நீர்துளியாக அதிகமாகி கடல் உருவாகி இருக்க பிறகு பூமியிலுள்ள வெப்பத்தின் காரணமாக அவைகள் தங்களின் தன்மையை அதாவது திரவ நிலையிலிருந்து வாயு நிலைக்கு தானாக (!?) மாற்றி மேல் சென்று பிறகு பூமிக்கு தரவேண்டும்.

இவை அனைத்தும் தானாக உருவாகி இருக்குமானால் எப்படி இருக்கும் தெரியுமா? மேகம் எங்கு நீர் எடுக்கிறதோ அங்கு மட்டும் தான் மழை உருவாக வேண்டும், கடல், ஏரி, ஆறு போன்று நீர் உள்ள இடங்களிலிருந்து மேகம் நீர் எடுக்கிறது, உதாரணமாக கடல் நீர் மேகமாக மாருமானால் மழை கடலில் மட்டும் தான் பெய்யவேண்டும், அவ்வாறா நடக்கிறது இப்பூவுலகில், அதற்காக கடவுள் கொடுத்த ஒரு அமைப்புதான் காற்றில் மேகம் நகருதல்,எங்கிருந்து அது நீர் எடுத்தாலும் சுழன்று கொண்டு அனைத்து இடங்களுக்கும் மழையை தருகிறது, நம் ஊரில் உள்ள தண்ணீர் வண்டி என்ன செய்கிறது, அசுத்தமான நீரை சுத்தபடுத்தி அதை ஒரு வண்டியில் ஏற்று ஊர் முழுவதுமாக வளம் வருகிறது எங்கு தண்ணீர் வேண்டுமோ அங்கு அளிக்கிறது, இதே வேலையை செய்யத்தான் மழை என்ற ஒன்றை கடவுள் ஏற்படுத்தி தேவை படும் இடங்களில் பொழிய செய்கிறார், இந்த அமைப்பு எதற்காக நடக்கிறது அனைத்து உயிரினங்களும் வாழ வேண்டும் என்ற காரணத்திற்காக.

மேகத்தின் வேகம் என்பது இந்த பூமி சுழற்சியின் வேகத்தைவிட அதிகம் என்று கூட கூறலாம், ஏனெனில் பூமி தான் சுற்றும் போது தன்னுடைய வலிமண்டலதையும் இழுத்துக்கொண்டு சுற்றுகிறது, மேகம் என்பது பூமியின் வலிமண்டலத்தில் தான் உள்ளது. உதாரணமாக ஒருவர் மணிக்கு 10 கி மி வேகத்தில் நடக்கிறார் என்றால் அவர் உண்மையில் பூமியின் சுழற்சியையும் (529.75 kmph) சேர்த்து 539.75 கிலோ மீட்டர் வேகத்தில் நடக்கிறார் என்று தான் பொருள், இதை இங்கு நாம் குருப்பிடுவதற்கான காரணம் பூமிதான் சுற்றுகிறதே மேகம் எதற்காக நகர வேண்டும், அப்படி நகராமல் ஒரே இடத்தில் இருந்து விட்டால் என்ன நடக்கும் தெரியுமா தண்ணீர் இருக்கும் இடங்களில் மட்டுமே மழை கிடைக்கும், அப்படியெனில் உயிரினங்கள் இருக்குமா, நாம் தற்போது இருப்பது போன்ற எந்த குறையும் இல்லாமல் வாழ முடியுமா? இந்த தத்துவத்தை பார்க்கும், சிந்திக்கும் ஒரு மனிதன் என்ன உணருவான் இப்பூமியில் உயிரினங்களை வாழவைக்க மறைமுகமாகவோ அல்லது நேராகவோ ஒரு சக்தி உதவுகிறது என்று அடிப்படை நிலையை ஏற்று கொண்டுதான் ஆகவேண்டும், இல்லையெனில் மேகம் எதற்காக நகரவேண்டும் மழை எதற்காக பொழிய வேண்டும், இது போன்ற நாம் உணரவே முடியாத இவ்வுலகையும் இந்த தத்துவங்களையும் செயல்படுத்தி கொண்டிருக்கும் அந்த மாபெரும் சக்தியை அரைகுறையாக கூட உணரமட்டோம்.

இதில் முக்கியமாக குறிப்பிடப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் தற்போதைய அறிவியல் படி மழை பெய்ய மேகம் உருவானால் மட்டுமல்லாமல் ஏர்பான் (Airborne) என்ற ஒரு வகையான பாக்டீரியாவின் பங்கும் அதிகம் உள்ளதாம். உயிர்களை வாழவைக்க உதவுவது நுண்ணுயிரிகள், பூமியில் நீர் இல்லையெனில் உயிரினங்கள் இல்லை, நீர் இல்லையெனில் கடல் இல்லை, கடல் இருந்தாலும் வெப்பம் இல்லையெனில் மேகம் இல்லை, மேகம் இருந்தும் புவி ஈர்ப்பு விசை இல்லையெனில் மழை இல்லை. சுருங்க சொல்வதென்றால் ஒன்றில்லையேல் ஒன்றில்லை என்ற மிகவும் சிக்கலான ஆயிரக்கணக்கான அமைப்பை வைத்து கொண்டு இதுதான் முதலில் வந்தது அதுவும் தானாக வந்தது என்ற வாதம் எந்த அளவிற்கு அறிவுடையதாக இருக்கும் என்பதை நாம் உணரவேண்டும்.

பொதுவாக வெள்ளம் வறட்சி ஏற்படுதல் என்பது எப்போது என்பது நாம் அறிந்ததே இயற்கைக்கு முரணான (அதாவது உலக அமைப்பிற்கு பங்கம் விளைவிக்கும் பொழுது) இவைகள் நடைபெறும், குளோரோ ப்லோரோ கார்பன் அதிகமாக வெளியிடும் பொழுது, ஒரே இடத்தில் சுரங்கம் தண்டவாளம் போன்றவைகளுக்காக குண்டு வெடிப்புகளால் தொண்டபடுதல் போன்ற இயற்கை அமைப்பை சிதைக்கும் போதுதான் நமக்கு வெள்ளம் மற்றும் பூகம்பம் போன்ற பெரிய பாதிப்புகள் நடைபெறும். இதிலிருந்து நாம் விளங்கி கொள்வது மேலே குறுப்பிட்ட இந்த இயற்கை அமைப்பு என்பது எவ்வாறு ஏற்பட்டது. தானாக உருவான ஒன்று அதன் அமைப்பை மாற்றும் போது எதற்காக எதிர்மறை விளைவை ஏற்படுத்த வேண்டும். சாதரணமாக எதிர்மறை விளைவை ஏற்படுத்தாத அமைதியான அமைப்பை அது எப்படி பெற்றது என்பதை நாம் நன்கு சிந்திக்க வேண்டும். இவைகள் அனைத்தும் நடப்பது ஒரு காரணம் இல்லாமலா? இதை பார்க்கும் போதே தெரியவில்லையா ஒரு சக்தி தான் இதை இயக்குகிறது என்று.

மழை எதற்காக பெய்கிறது என்று யாரிடமாவது கேட்டால் அதற்கு பதில் உயிரினங்களுக்காக என்றுதான் கூறுவார்கள், இது உலகில் அனைவரும் அறிந்த நியதி என்று கூட கூறலாம், இணையத்தில் மழை ஏன் பெய்கிறது என்ற கேள்வியை பற்றி தேடினால், எப்படி உருவாகிறது எங்கிருந்து பெய்கிறது, என்னென்ன வகைகள் அதில் உள்ளன என்ற பதிலெல்லாம் கிடைத்தது, என்னுடைய கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை என்னுடைய கேள்வி:

மழை ஏன் பெய்கிறது? எதற்காக பெய்ய வேண்டும் என்பது தான்.
“அவர்கள் (இதையும்) கவனிக்கவில்லையா – நிச்சயமாக நாமே வறண்ட பூமியின் பக்கம் மேகங்கள் மூலமாக தண்ணீரை ஓட்டிச் சென்று அதன் மூலம் இவர்களும் இவர்களுடைய கால் நடைகளும் உண்ணக் கூடிய பயிர்களை வெளிப்படுத்துகிறோம். அவர்கள் (இதை ஆய்ந்து) நோட்டமிட வேண்டாமா? (அல் குர்ஆன் 32 : 27)”


Monday, September 5, 2011

இஸ்லாத்தின் பெயரால் போலிச் சடங்குகள்!!

நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம்? ஒரு கணம் சிந்திப்போமாக!


நாம் பெயரளவில் மட்டுமே முஸ்லிம்கள்!

புனித இஸ்லாத்தைப் பின்பற்றுவதாகக் கூறிக் கொள்ளும் நாம், மார்க்கத்தின் பெயரால் சம்பிரதாயங்களையும், சடங்குகளையும் பின் பற்றிக்கொண்டு நமது வசதிக்கேற்ப தொழுகை, நோன்பு போன்ற சில வணக்கங்களை மட்டும் செய்துவிட்டு நாமும் முஸ்லிம்கள் என மார்தட்டிக் கொள்கிறோம்.


உண்மையில் நாம் முஸ்லிம்களாக வாழ்கிறோமா?

அல்லாஹ்வை நமது ஏகநாயனாகவும், அவன் இறுதித்தூதரை நமது வாழ்வின் ஒரே வழிகாட்டியாகவும் ஏற்றுக்கொண்டுள்ள நாம், இஸ்லாத்தின் மூலாதாரங்களான அல்லாஹ்வின் அருள் மறையாம் அல்குர்ஆனையும் அவனது தூதரின் தூயபோதனையாம் அல் ஹதீஸையும் பின் பற்றுகிறோமா ? அவற்றின்படி செயலாற்றுகிறோமா?

இவற்றைப் பின்பற்றாது மனம்போன போக்கில் விரும்பியவாறு வாழ்ந்துவிட்டால் நாம் உண்மையான முஸ்லிம்களாக இருக்க முடியுமா? என நாம் நம் நெஞ்சைத் தொட்டு நம்மையே நாம் கேட்டுப்பார்ப்போம். எத்தனை சதவிகிதம் நாம் பின்பற்றுகிறோம் எனத் தெரிந்துவிடும்.


இதோ இஸ்லாத்தின் பெயரால் நாம் செய்யும் பித்அத்துகள்! சடங்குகள்!!

முதன் முதலில் நமக்குக் குழந்தை பிறந்ததும் மதபோதகர் ஒருவரை அழைத்து பொருள் புரிந்தோ புரியாமலோ அழகாகத் தெரியும் ஒருபெயரை தேர்வு செய்து பாத்திஹா, துஆ ஓதி பெயர் சூட்டி மகிழ்கிறோம்.

பின்னர் அரபி மத்ரஸாக்களில் குர்ஆன் ஓதுவதற்காக அனுப்பிவைக்கிறோம். எப்படி ஓதிவருகிறார்கள்? என்னென்ன மார்க்க அறிவுகளைப் பெற்று வருகிறார்கள்? என்பதை எந்தப் பெற்றோரும் கவனிப்பதே இல்லை. பிற்காலத்தில் கல்லூரியில் காலெடுத்து வைக்கும் நாட்களில் சரியாக ஓதத்தெரியாததால் மறந்துவிட்டது என பரிதவித்து ஓலமிடும் பலரை நாம் இன்று காணமுடிகிறது.


அது மட்டுமா?

பிள்ளைகளுக்கு ஊர்வலம் நடத்தி சுன்னத் வைபவம், புனித நீராட்டு விழா, திருமண வைபவங்கள் போன்றவற்றை சீதனப் பகட்டுகள், மேளதாளங்கள், வாணவேடிக்கைகள், பாட்டுக்கச்சேரிகள் என ஊரே வியக்கும்படி நமது வீட்டு வைபவங்களை குருமார்களின் தலைமையில் ஃபாத்திஹா, துஆ போன்றவற்றை ஓதி கோலாகலமாக அரங்கேற்றி பெருமைப்படுகிறோம்.

நடை மவ்லிது, விடி மவ்லிது


நல்லவை நிகழவும், பயணம் போகவும் நாடியது நடக்கவும் நடை மவ்லிது, விடி மவ்லிது ஓதி ‘பரக்கத்தும் பொருளும்’ குவிய விடிய விடிய சினிமா மெட்டுகளில் கச்சேரிகள் நடத்தி அமர்க்களப்படுத்துகிறோம்.


ராத்திபு, குத்பிய்யது, ஞானப்பாடல்

இவை போதாது என இறைவனின் விசேச அருளைப்பெற ராத்திபு, குத்பிய்யத்து, தரீக்காக்களின் பல்வேறு செய்குகள் அரங்கேற்றிய திக்ருகள், ஹல்காக்கள், ஞானிகள் இயற்றிய ஞானப்பாடல்கள், 4444 தடவைகள் என்ற எண்ணிக்கையில் ஸலவாத்துந் நாரியாவெனும் நரகத்து ஸலவாத்துகளை ஓதி வருகிறோம்,

மாயமந்திரங்கள்

பேய் பிசாசுகளை ஓட்ட தாவீசுகள், முடிச்சுக் கயிறுகள், மாய மந்திரங்களை தட்டைப் பீங்கானில் இஸ்முகள் என்ற பெயரில் எழுதிக் கரைத்துக் குடிப்பது, அரபி எழுத்துகளில் அழகாக வடித்து வீட்டுச்சுவர்களில் மாட்டுவது, நோய் நொடிகள் தீர பெண்களுக்கு தனியாக ஓதிப் பர்ப்பது போன்ற ஆயிரமாயிரம் போலிச் சடங்குகளை இஸ்லாத்தின் பெயரால் அரங்கேற்றி அப்பாவி மக்களை ஏமாற்றிவரும் அவலக்காட்சிகளையும் காணுகிறோம்.

இவையெல்லாம் போலிச்சாமியார்கள், சாயிபாப்பாக்கள், வேடதாரிகள் நடத்தும் கபடநாடகங்கள்! ஏமாற்று வித்தைகள்!! கம்பியெண்ணவைக்கும் ஈனச் செயல்கள்!!


போலிகளிடம் ஏமாறாதீர்!


இவர்கள் வழியில் ஷெய்குகள்.மகான்கள் என்ற போர்வையில் இறையருள் பெற்ற மனிதப்புனிதர்கள் என்ற மாயையை எற்படுத்தி மக்களை ஏமாற்றும் எத்தர்களை இனம் கண்டு கொள்ள வேண்டாமா? இவர்களிடம் மண்டியிட்டு ஏமாறும் அப்பாவி ஆண்களையும், பெண்களையும் என்னென்பது?


இவற்றையெல்லாம் அறிவார்ந்த நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டாமா?
மரணச்சடங்குகளும் கர்மாதிகளும்


மரணச் சடங்குககளோ இந்துக்களை மிஞ்சுமளவுக்குச் சென்று விட்டது. மூன்றாவது நாள் ஃபாத்திஹா, பத்தாவது நாள் ஃபாத்திஹா, நாற்பதாவது நாள்-ஃபாத்திஹா என அரபி மத்ரஸாக்களில் படிக்கும் அப்பாவி மாணவர்களை வாடகைக்கு அமர்த்தி முழுக் குர்ஆனையும் ஓதுவது, இவற்றைக் கடன் பட்டாவது, சொத்துகளை விற்றாவது விருந்து வைபவங்களை கோலாகலமாக நிறைவேற்றி கர்மாதிகளை நடத்தி வருவதையும் பர்க்கிறோம்.


அகிலத்திற்கெல்லாம் வழி காட்டும் வான்மறை இதற்காகவா அருளப்பட்டது ?
முகவரியில்லா மகான்கள்


அடுத்து ஊர் பெயர் வரலாறே இல்லாத கப்ருகளுக்கு தெய்வீகப் பெயர்சூட்டி, அவ்லியாக்கள், ஷெய்குமர்ர்கள், நாதாக்கள் என அங்கீகாரமளித்து ஆண்டுதோறும் உற்சவங்கள், சந்தன உரூஸ்கள், கூடு கொடிகள், யானை ஊர்வலங்கள், கரக ஆட்டங்கள் என ஊரே அமர்க்களப்படும்படி விழாக்கள் எடுப்பதையும் கண்டு வருகிறோம்.


பாட்டுக்கச்சேரியும் நடனமும்

கப்ருகளைச் சுற்றி கராமத்துகளை விளக்கும் பாட்டுக்கச்சேரிகள், கதா காலட்சேபங்கள், மக்களை மயக்கும் நடன நிகழ்ச்சிகள், கப்ரு ஆராதனைகள், நேர்ச்சை தபர்ருக்கள், விஷேச மந்திரங்கள், கந்தூரிக் காட்சிகள் என அனாச்சாரங்களை வகைப்படுத்திக் கொண்டே போகலாம். இவையெல்லாம் மார்க்கத்தின் பெயரால் அர்ச்சனை செய்யப்படுகின்ற கைங்கரியங்கள் என்பது தான் வேதனையிலும் வேதனை!


பக்கவாத்தியங்கள்

இதற்கு போலி மத குருமார்களும், ஷைகுமார்களும், முல்லாக்களும் வயிறு வளர்க்கும் சில சில்லரை உலமாக்களும் பக்கவாத்தியங்களாக விளங்குவது தான் வேடிக்கையாக உள்ளது.


பிறந்த நாள் விழாக்கள்

இந்துக்கள், கிறித்தவர்கள் ஆகியோரின் எல்லாப்பழக்க வழக்கங்களையும் தவறாது பின்பற்றி ‘பிறந்த நாள் விழா, இறந்த நாள் விழா, ஆண்டு விழா’ என பல்வேறு விழாக்களையும் விடாது நடத்திக்கொண்டு நாங்கள் தான் உண்மையான முஸ்லிம்கள் என வீர முழக்கமிடுகிறோம்.

இவை போதாதென்று நபிகள் நாயகம் பிறந்த நாள் விழா, கௌதுல் அஃலம் நினைவு விழா, ரிஃபாயி ஆண்டகை விழா, நாகூர் நாயக விழா, காஜா முயீனுத்தீன் ஜிஸ்தி உரூஸ் விழா, மோத்தி பாவா ஆண்டு விழா, குணங்குடி மஸ்தான் விழா, பொட்டல் புதூர் மைதீன்(யானை) ஆண்டகை விழா, ஆத்தங்கரை செய்யிதலி அம்மா விழா, பீமாப்பள்ளி பீஅம்மா விழா, பீடி மஸ்தான் விழா, தக்கலை பீரப்பா விழா, மெய்நிலை கண்ட ஞானிகள் விழா என மிகவும் பக்தியோடு தேசிய விழாக்களாக கரக ஆட்டங்களுடன் யானை ஊர்வலம் சகிதமாக கொண்டாடப்பட்டு வரும் புதுமையான விழாக்களையும் நாடெங்கிலும் பரவலாகக் காண முடிகிறது.


ஞானமர்ர்க்கத்தின் பெயரால் தீட்சைகள்

நம்மை வழி நடத்தும் குருமார்களோ நமது பலவீனங்களையும், அறியாமையையும் பயன்படுத்திக்கொண்டு சுவர்க்கத்திற்கு வழிகாட்டுகிறோம் எனக் கூறி ஆதாயம் தேடி வழிகெடுத்து வருகின்றனர். பால் கிதாபு என்றும், தாவீசு என்றும், இஸ்மு என்றும், தீட்சை யென்றும், பைஅத் என்றும், முரீது என்றும் கூறி ஞான மார்க்கத்தின் பெயரால் நம்மை அதல பாதாளத்திற்கு அழைத்துச் செல்கின்றனர்.

பித்அத்கள் (புதுமைகள்) பெயரால் சமுதாயத்தில் அரங்கேறிவிட்ட சீர்கேடுகளைப் பார்த்ததீர்களா?


விஞ்ஞானயுகத்தில் கற்காலம்

விஞ்ஞானத்தின் உச்சிக்குச் சென்று வியத்தகு விந்தைகள் புரியும் இந்த அறிவியல் உலகில் வாழ்ந்து கொண்டு கற்கால மனிதர்களைப்போல் இயங்கும் நம் மக்களின் அறியாமையையும் பேதமையையும் என்னென்பது? இஸ்லாம் கூறும் அறிவியல் நுட்பங்களையும், அற்புதமான தத்துவங்களையும் தனிசிறந்த நாகரிகத்தையும் மிக உயர்ந்த கலாச்சாரத்தையும் அலட்சியப்படுத்தும் அவல நிலையை யாரிடம் சொல்வது?

இந்த போலிச் சம்பிரதாயங்களையும், சடங்குககளையும் புனித இஸ்லாம் அனுமதிக்கிறதா? இவற்றிற்கெல்லாம் சாவு மணியடிக்க வேண்டாமா? கண்மூடித்தனமான பழக்கங்களையெல்லாம் மண் மூடச்செய்ய வேண்டாமா? குர்ஆனிலோ ஹதீஸ்களிலோ இவற்றுக்கெல்லாம் ஏதேனும் ஆதாரங்கள் உள்ளனவா? என்றால் இல்லவே இல்லை. பின் எங்கிருந்து இவை இறக்குமதியாயின? யூதர்கள், கிறித்தவர்கள், இந்துக்கள் போன்ற மாற்றாரிடமிருந்து படிப்படியாக இறக்குமதியாகி தொற்றிக் கொண்ட சாத்திரங்கள்! ஒட்டிக்கொண்ட நோய்கள்!! பேயாட்டம் போடும் போலிச்சடங்குகள்!!!


இதோ ஒரு கணம் சிந்திப்பீர்! நாம் இந்துக்களா ? முஸ்லிம்களா ?


1. அங்கே சிலை வணக்கம் : இங்கே கப்ரு வணக்கம்
2. அங்கே தேர் திருவிழா : இங்கே சந்தனக்கூடு
3. அங்கே பால் அபிசேகம் : இங்கே சந்தன அபிசேகம்
4. அங்கே சாம்பல் திருநீறு : இங்கே சந்தனத் திருநீறு
5. அங்கே சிலைக்குப்பட்டுப்புடவை : இங்கே கப்ருக்குப்பட்டுத்துணி
6. அங்கே பூமாலை பத்தி ஆராதனை : இங்கேயும் பூமாலை பத்திகள்
7. அங்கே குத்துவிளக்கு : இங்கேயும் குத்து விளக்கு
8. அங்கே அம்மன் முன் சாஷ்டாங்கம்: இங்கே கப்ரின்முன் சாஷ்டாங்கம்.
9. அங்கே கோயிலைச் சுற்றி வருதல் : இங்கே கப்ரை சுற்றி வலம்வருதல்
10. அங்கே சர்க்கரை கற்கண்டு பிரசாதம்: இங்கே சர்க்கரை பாயாசம் தபர்ருக்
11. அங்கே நேர்ச்சை காணிக்கை : இங்கேயும் நேர்ச்சை காணிக்கை
12. அங்கே சாமியிடம் வேண்டுதல் : இங்கே கப்ரிலே வேண்டுதல்
13. அங்கே பிள்ளைக்காக பூஜை : இங்கே பிள்ளைக்காகப் பிரார்த்தனை
14. அங்கே குழந்தைக்காக தொட்டில் : இங்கேயும் தர்காவில் தொட்டில்
15. அங்கே திருப்பதி மொட்டை : இங்கேயும் தர்காவில் மொட்டை.
16. அங்கே மயிலிறகு மந்திரம் : இங்கேயும் மயிலிறகு ஆசீர்வாதம்
17. அங்கே தீட்சை : இங்கே முரீது, பைஅத்
18. அங்கே மஞ்சள் கயிறு தாலி : இங்கே தங்கம்-கருக மணித்தாலி
19. அங்கே பக்திப்பாடல் : இங்கே மவ்லிது ராத்தீபு பைத்து
20. அங்கே சுப்ரபாதம் : இங்கே ஞானப்பாடல்.
21. அங்கே ஜோதிடம், ஜாதகம் : இங்கே பால்கிதாபு, இஸ்முகிதாபு
22. அங்கே நல்ல நாள், ராவு காலம் : இங்கே நஹ்ஸு நாள், ராவு காலம்.
23. அங்கே மார்கழி மாதம் பீடை : இங்கே ஸஃபா மாதம் பீடை
24. அங்கே கழுத்தில் கையில் தாயத்து : இங்கேயும் கழுத்தில், கையில் தாவீசு
25. அங்கே சாமி ஆடுவார் : இங்கே பே ஆடும்.
26. அங்கே சாமி அருள் வாக்கு : இங்கே அவ்லியா கனவில் அருள்வாக்கு.
27. அங்கே தீமிதி உண்டு : இங்கேயும் முஹர்ரம் மாதத்தில் தீமிதி உண்டு.
28. அங்கே திதி திவசம் : இங்கே ஃபாத்திஹா, கத்தம்.
29. அங்கே சரஸ்வதி, லட்சுமி படங்கள் : இங்கே நாகூர், அஜ்மீர் படங்கள்,
30. அங்கே துவஜா ரோகனம் கொடி : இங்கே நாகூர் அஜ்மீர் கொடியேற்றல்.
31. அங்கே வீட்டு முகப்பில் ஓ மந்திரம் : இங்கே வீட்டில் 786 மந்திரம்.
32. அங்கே விநாயகர் ஊர்வலம் : இங்கே மீலாது, யானை ஊர்வலம்.
33. அங்கே காவடி ஊர்வலம் : இங்கே அல்லாஹ்சாமி ஊர்வலம்.


இவை மட்டுமா? இன்னும் எத்னை எத்தனையோ? சடங்குகள் !


இவ்வாறு ஆயிரமாயிரம் மதச்சடங்குகள் நம்மிடம் புரையோடிப் போய்விட்டன. நவூது பில்லாஹ்! வல்லான் அல்லாஹ் நம் சமுதாய மக்களைக் காப்பானாக! இப்போது சொல்லுங்கள்! நம்மிடம் இஸ்லாம் இருக்கிறதா? நாம் இஸ்லாத்தில் இருக்கிறோமா? நாம் முஸ்லிம்களாக வாழ்கிறோமா? போலிகளாக வாழ்கிறோமா?


முஸ்லிம்கள் எங்கே இருக்கிறார்கள்?

இந்திய விடுதலைக்கு வித்திட்ட அல்லாமா இக்பால் கூறுகிறார்:-
‘முஸ்லிம்கள் முஸ்லிம்கள் என்று கூப்பாடு போடுகிறார்கள்!
செயல்களில் சம்பிதாயச் சடங்குகளில நாம் இந்துக்களாக வாழ்கிறோம்.
ஆடைகளில் கலாச்சாரங்களில் மேலை நாட்டு மோகத்தில் கிறித்தவர்களாக வாழ்கிறோம்! வாணிபத்தில் வியாபார முறைகளில் யூதர்களாக வாழ்கிறோம்! அவ்வாறாயின் முஸ்லிம்கள் எங்கே இருக்கிறார்கள்? ‘முஸ்லிம்கள் எங்கே இருக்கிறார்கள்?’


‘அவர்களில் பெரும்பாலோர் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டே (அவனுக்கு) இணையும் கற்பிக்கிறார்கள்.’ (அல்-குர்ஆன்12:106) என்ற மறை வசனமும்,

‘யார் எந்த சமுதாயத்தைப் பின்பற்றி வாழ்கிறார்களோ அவர்கள் அந்த சமுதாயத்தைச்சார்ந்தவர்களே!’ (நூல் அபூ தாவூது) என்ற நபி மொழியும் இன்று மிகவும் சிந்திக்க வேண்டிய வைர வரிகள்!

இவற்றையெல்லாம் அசை போட்டு சிந்தித்து சீர்தூக்கி நமது அறிவிற்கேற்ற உயரிய மார்க்கமாம் தூய இஸ்லாத்தை வழுவாது பின்பற்றி குர்ஆன் சுன்னாஹ் வழியில் உண்மை முஸ்லிம்களாக வாழ்வோமாக!


வாருங்கள்.இன்று நாம் சபதம் ஏற்போம் !
அறிவுக்கேற்ற மார்க்கமாம் இஸ்லாத்தை நோக்கி அகில உலகமும் மிக வேகமாக வரும் இந்த கணினியுகத்தில், முஸ்லிம்களாகிய நாம், இனியும் அறிவுக்கே பொருந்தாத மூட நம்பிக்கைகளை நம்பி,

சடங்கு சம்பிரதாயங்களைச் செய்து மோசம் போக மாட்டோம்! போலி மதவாதிகளால் ஏமாற மாட்டோம்!! என சபதம் ஏற்போமாக!

இஸ்லாத்தின் தூய கொள்கைகளை உயிருள்ளவரை உறுதியுடன் பின்பற்றி அறநெறி வழுவாது வாழ்வோம்.
என இன்று வீரசபதம் ஏற்போமாக!

‘இஹ்தினஸ்ஸராத்தல் முஸ்தகீம்’

இறைவா! எங்களுக்கு நேரான வழியைக் காட்டுவாயாக! (அல்குர்ஆன்: 1:06)

رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَة ً وَفِي الآخِرَةِ حَسَنَة ً وَقِنَا عَذَابَ النَّار

‘ரப்பனா ஆத்தினா ஃபித்துன்யா ஹஸனத்தன் வஃபில் ஆகிரத்தி ஹஸனத்தன் வகினா அதாபந்நார்’
எங்கள் இறைவா! எங்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் நன்மையை நல்கும் நல் வாழ்வை வழங்குவாயாக! (அல்குர்ஆன்: 2:201)

Tuesday, August 30, 2011

இரு பெருநாள் தொழுகைப் பற்றிய நபிமொழித் தொகுப்பு


பெருநாள் தொழுகையின் நேரம்:

ஈத் பெருநாட்களில் குளிர்ந்த காலை நேரங்களில் அவரவர் வீடுகளிலிருந்து வெளிப்பட்டு (தொழ) செல்பவர்களுக்கு அல்லாஹ் அளப்பரிய அருளைப் பொழிகிறான்.அறிவிப்பவர்: அனஸ்பின் மாலிக்(ரலி) நூல்: இப்னு அஸாகிர்

இரண்டு ஈட்டிகளின் உயரத்திற்கு சூரியன் உயரும்போது நோன்புப் பெருநாள் தொழுகையை நபி(ஸல்)தொழுவார்கள். (ஒரு ஈட்டியின் உயரம் என்பது ஏறத்தாள மூன்று மீட்டர்களாக ஆகும். அறிவிப்பாளர்: ஜுன்துப்(ரலி) நூல்: அஹ்மது இப்னுஹஸன்

நோன்புப் பெருநாளில் தொலச் செல்வதற்கு முன்பே சாப்பிடுவது:

நபி(ஸல்)அவர்கள் உண்ணாமல் நோன்புப் பெருநாள் தொழுகைக்கு புறப்பட மாட்டார்கள். ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையைத் தொழுவதற்கு முன் உண்ண மாட்டார்கள் என புரைதா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். நூல்: திர்மிதீ

சில பேரிச்சம் பழங்களை உண்ணாமல் நோன்புப் பெருநாளில் (தொழுகைக்கு) நபி(ஸல்)அவர்கள் புறப்பட மாட்டார்கள். அறிவிப்பவர்: அனஸ்(ரலி) புகாரி மற்றோர் அறிவிப்பில் அவற்றை ஒற்றைப்படை எண்ணிக்கையில் உண்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

நபி(ஸல்)அவர்கள் ஈதுல் பித்ர் (நோன்பு) பெருநாளன்று காலையில் ஏழு பேரித்தம் பழங்களை சாப்பிடாமல் வெளியேற மாட்டார்கள் (அறிவிப்பாளர்: ஜாபிர்பின் சம்ரா(ரலி) நூல்: தப்ரானி மற்றோர் அறிவிப்பில் அவற்றை ஒற்றைப்படை எண்ணிக்கையில் உண்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது. (அறிவிப்பாளர்: அனஸ்(ரலி) புகாரி)

தக்பீர்:

ஈத் பெருநாட்களை அல்லாஹ்வைப் புகழ்வது கொண்டும் தக்பீரைக் கொண்டும் அழகு படுத்துங்கள். அறிவிப்பாளர்: அனஸ்பின் மாலிக்(ரலி) நூல்:நயீம்

பெருநாள் வந்துவிட்டால் நபி(ஸல்)அவர்கள் (போவதற்கும் வருவதற்கும்) பாதைகளை மாற்றிக் கொள்வார்கள். புகாரி

நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் (திடலில் தொழுவதால் தடுப்பாக) நபி(ஸல்) அவர்களுக்கு முன்னால் ஓர் ஈட்டி நாட்டப்படும். நபி(ஸல்)அவர்கள் (அதை நோக்கித்) தொழுவார்கள். இப்னுஉமர்(ரலி),புகாரி

நபி(ஸல்)அவர்கள் (பெருநாள் தொழுகைக்காகத்) தொழும் திடலுக்குப் புறப்படுவார்கள். அவர்களுக்கு முன்பே கைத்தடி எடுத்துச் செல்லப்பட்டுத் தொழும் இடத்தில் அவர்களுக்கு முன்னால் நாட்டப்படும். அதை நோக்கி நபி(ஸல்)தொழுவார்கள். இப்னு உமர்(ரலி), புகாரி


திடலில் பெருநாள் தொழுகை:


பெரும்பாலும் நபி(ஸல்)அவர்கள் பெருநாள் தொழுகைகளை திறந்த பொது மைதானத்தில் தொழுதுள்ளார்கள். மழை காலத்தில் பெருநாள் தொழுகையை பள்ளியில் நடத்தினார்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி) அபூதாவூத், இப்னுமாஜா

நபி(ஸல்)அவர்கள் நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளியில் தொழாமல்) திடலுக்குச் செல்பவர்களாக இருந்தனர். அவர்கள் முதன் முதலில் தொழுகையையே துவக்குவார்கள். தொழுது முடித்து எழுந்து மக்களை முன்னோக்குவார்கள். மக்களெல்லாம் தங்கள் வரிசைகளில் அப்படியே அமர்ந்திருப்பார்கள். அவர்களுக்குப் போதனைகள் செய்வார்கள். (வலியுறுத்த வேண்டியதை) வலியுறுத்துவார்கள்; (கட்டளையிட வேண்டியதை) கட்டளையிடுவார்கள். ஏதேனும் ஒரு பகுதிக்குப் படைகளை அனுப்ப வேண்டியிருந்தால் அனுப்புவார்கள். எதைப் பற்றியேனும் உத்தரவிட வேண்டியருந்தால் உத்தரவிடுவார்கள். பின்னர் (இல்லம்) திரும்புவார்கள். அபூ ஸயீத்(ரலி), புகாரி

பெருநாள் தொழுகையில் பாங்கும், இகாமத்தும் சொல்லப்பட்டதில்லை:

ஜாபிர்(ரலி), இப்னு அப்பாஸ்(ரலி) ஆகியோர் கூறினார்கள்: நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் பாங்கு சொல்லப்பட்டதில்லை. நூல்:புகாரி

நபி(ஸல்)அவர்கள் (பெருநாள் தொழுகைக்குத்) தயாராகித் தொழுகையைத் துவக்கினார்கள். பிறகு மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். நபி(ஸல்)அவர்கள் (உரை நிகழ்த்தி) முடித்து இறங்கிப் பெண்கள் பகுதிக்குச் சென்று பிலால்(ரலி) உடைய கை மீது சாய்ந்து கொண்டு பெண்களுக்குப் போதனை செய்தார்கள். அறிவிப்பாளர்: ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி), நூல்: புகாரி

பிலால்(ரலி) தம் ஆடையை ஏந்திக்கொள்ள, பெண்கள் தங்கள் தர்மத்தை அதில் போடலானார்கள். நான், நபி(ஸல்)அவர்கள், அபூ பக்ர்(ரலி), உமர்(ரலி), உஸ்மான்(ரலி) ஆகியோருடன் பெருநாள் தொழுகையில் பங்கெடுத்துள்ளேன். அவர்கள் அனைவரும் உரை நிகழ்த்துவதற்கு முன்பே தொழுபவர்களாக இருந்தனர். புகாரி

நபி(ஸல்)அவர்கள், அபூ பக்ர்(ரலி), உமர்(ரலி) ஆகியோர் இரண்டு பெருநாள்களிலும் உரை நிகழ்த்துவதற்கு முன் தொழுபவர்களாக இருந்தனர். இப்னு உமர்(ரலி), நூல்:புகாரி


பெருநாள் தொழுகைக்கு முன் பின் எந்த தொழுகையுமில்லை:

நபி(ஸல்)அவர்கள் நோன்புப் பெருநாள் தினத்தில் புறப்பட்டு இரண்டு ரக்அத்கள் தொழுதனர். அதற்கு முன்பும் பின்பும் எதையும் அவர்கள் தொழவில்லை. அவர்களுடன் பிலால்(ரலி) அவர்களும் சென்றனர் என இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். நூல்:புகாரி

நபி(ஸல்)அவர்கள் நோன்புப் பெருநாளில் இரண்டு ரக்அத்கள் தொழதனர். அதற்கு முன்னம் பின்னும் எதையேனும் தொழவில்லை. பிறகு பெண்கள் பகுதிக்கு வந்தனர். அவர்களுடன் பிலால்(ரலி) இருந்தார். தர்மம் செய்வதன் அவசியம் குறித்து அவர்களுக்கு நபி(ஸல்)விளக்கினார்கள். பெண்கள் (தங்கள் பொருட்களைப்) போடலானார்கள். சில பெண்கள் தங்கள் கழுத்து மாலையையும் வளையல்களையும் போடலானார்கள். அறிவிப்பவர்:இப்னு அப்பாஸ்(ரலி), நூல்: புகாரி


முதல் ரக்அத்தில் ஏழு தக்பீர்களும், இரண்டாவது ரக்அத்தில் ஐந்து தக்பீர்களும் :

நபி(ஸல்)அவர்கள் பெருநாள் தொழுகையில் முதல் ரக்அத்தில் ஏழு தக்பீர்களும் இரண்டாவது ரக்அத்தில் ஐந்து தக்பீர்களும் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு அம்ரு(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். நூல்: அஹ்மத், இப்னுமாஜா

“நோன்புப் பெருநாள் தொழுகையில் முதல் ரக்அத்தில் ஏழு தக்பீரும் இரண்டாவது ரக்அத்தில் ஐந்து தக்பீரும் உள்ளது. அவை இரண்டிற்கும் பின்னரும் கிராஅத் (குர்ஆனை ஓதுதல்) உண்டு” என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள் என அம்ரு இப்னு ஷுஐப் தம் தந்தை மற்றும் பாட்டனார் வாயிலாக அறிவிக்கிறார். நூல்: புகாரி, திர்மிதீ


பெருநாள் தொழுகையில் பெண்கள்:


நபி(ஸல்)அவர்கள் நோன்புப் பெருநாளில் இரண்டு ரக்அத்கள் தொழதனர். அதற்கு முன்னம் பின்னும் எதையேனும் தொழவில்லை. பிறகு பெண்கள் பகுதிக்கு வந்தனர். அவர்களுடன் பிலால்(ரலி) இருந்தார். தர்மம் செய்வதன் அவசியம் குறித்து அவர்களுக்கு நபி(ஸல்)விளக்கினார்கள். பெண்கள் (தங்கள் பொருட்களைப்) போடலானார்கள். சில பெண்கள் தங்கள் கழுத்து மாலையையும் வளையல்களையும் போடலானார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி), நூல்:புகாரி

வீட்டில் தனித்து இருக்கும் நாங்கள் மாதவிடாய் பெண்கள் முதற்கொண்டு இரு பெருநாள் தொழுகைக்கு வெளியே வர ஆணையிடப்பட்டோம் தொழுகையில் கலந்து கொள்ளவும், பிரார்த்தனைகளில் பங்கேற்கவும் அனுமதிக்கப்பட்டோம். ஆனால் மாதவிடாய் பெண்கள் தொழுமிடத்திலிருந்து ஒதுங்கி இருக்க பணிக்கப்பட்டோம். அப்போது ஒரு பெண் அல்லாஹ்வின் தூதரே! எங்களில் எவருக்காவது உடை இல்லையெனில் என்ன செய்வது என வினவினார். அதற்கு நபி(ஸல்)அவர்கள் உங்களது தோழிகளிடமிருந்து ஓர் உடையை கடனாக வாங்கி உடுத்தி வாருங்கள் என பதில் கூறினர். அறிவிப்பவர் உம்மு அதிய்யா(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், நஸயி,நூல்:இப்னுமாஜ்ஜா

நபி(ஸல்)அவர்கள் (பெருநாள் தொழுகைக்குத்) தயாராகித் தொழுகையைத் துவக்கினார்கள். பிறகு மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். நபி(ஸல்)அவர்கள் (உரை நிகழ்த்தி) முடித்து இறங்கிப் பெண்கள் பகுதிக்குச் சென்று பிலால்(ரலி) உடைய கைமீது சாய்ந்து கொண்டு பெண்களுக்குப் போதனை செய்தார்கள். பிலால்(ரலி) தம் ஆடையை ஏந்திக் கொள்ள, பெண்கள் தங்கள் தர்மத்தை அதில் போடலானார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி), புகாரி

நபி(ஸல்)அவர்கள் நோன்புப் பெருநாளில் இரண்டு ரக்அத்கள் தொழதனர். அதற்கு முன்னம் பின்னும் எதையேனும் தொழவில்லை. பிறகு பெண்கள் பகுதிக்கு வந்தனர். அவர்களுடன் பிலால்(ரலி) இருந்தார். தர்மம் செய்வதன் அவசியம் குறித்து அவர்களுக்கு நபி(ஸல்)விளக்கினார்கள். பெண்கள் (தங்கள் பொருட்களைப்) போடலானார்கள். சில பெண்கள் தங்கள் கழுத்து மாலையையும் வளையல்களையும் போடலானார்கள். அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ்(ரலி) நூல்: புகாரி


பெருநாள் தொழுகையில் ஓதிய வசனங்கள்:


நபி(ஸல்)அவர்கள் இரு பெருநாள் தொழுகையிலும் ஜுமுஆத் தொழுகையிலும் ஸப்பிஹிஸ்ம ரப்பிக்கல் அஃலா (87வது அத்தியாயத்தையும்) ஹல் அதாக்க ஹதீஸுல் காஷியா (88வது அத்தியாயத்தையும்) ஓதி வந்தனர். பெருநாளும், ஜுமுஆவும் ஓரே நாளில் வரும்பொழுது இந்த இரண்டு அத்தியாயங்களை இரண்டு தொழுகையிலும் ஓதுவார்கள். அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர்(ரலி) நூமான் இப்னு பஷீர், நூல்கள்: முஸ்லிம், முஅத்தா, அபூதாவூத், திர்மிதீ, நஸயீ

50வது அத்தியாயத்தையும் 54வது அத்தியாயத்தையும் ஓதியதாக ஓர் அறிவிப்பு முஸ்லிம், முஅத்தா, அபூதாவூத், திர்மிதீ, நஸயீ ஆகிய நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது

பிரார்த்தனை:


பருவமடைந்த மற்றும் மாதவிடாய் பெண்களையும் பெருநாள் தொழுகைக்கு வெளியே அனுப்புமாறு நபி(ஸல்)அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். நற்பணிகளில் மற்றும் முஸ்லிம்களுடைய துஆவில் அவர்கள் பங்கு பெறுவதற்காக. ஆனால், மாத விலக்கான பெண்கள், தொழும் இடத்தின் ஓரப்பகுதியில் இருக்க வேண்டும். என உம்மு அதிய்யா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

பெருநாளில் நாங்கள் (தொழும் திடலுக்கு) புறப்பட வேண்டுமெனவும் கூடாரத்திலுள்ள கன்னிப் பெண்களையும் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களையும் புறப்படச் செய்ய வேண்டும் எனவும் கட்டளையிடப்பட்டிருந்தோம். பெண்கள் ஆண்களுக்குப் பின்னால் இருப்பார்கள். ஆண்களின் தக்பீருடன் அவர்களும் தக்பீர் கூறுவார்கள். ஆண்களின் துஆவுடன் அவர்களும் துஆச் செய்வார்கள். அந்த நாளின் பரக்கத்தையும் புனிதத்தையும் அவர்கள் எதிர்பார்ப்பார்கள். அறிவிப்பவர்: உம்மு அத்திய்யா (ரலி) நூல்கள்: புகாரீ, முஸ்லிம்.

தொகுப்பு: S.A. சுல்தான் (seaport, Jeddah)


Saturday, August 27, 2011

நிச்சயிக்கப்பட்ட அந்த நாளிகை

கருத்து வேறுபாடற்ற ஒரே தலைப்பு, அது மரணம் என்பது மட்டுமே! இரண்டாம் கருத்துக்கு இடம்பாடுள்ள விடயங்களில் தலையைப் பிய்த்துக் கொள்ளும் நாம், நிச்சயிக்கப்பட்ட அந்த நாளிகையை மறந்து விட்டோமா? அல்லது உலக வாழ்க்கையும் சடவாதமும் நம்மை மறக்கடிக்கச் செய்து விட்டதா?

புரியாத புதிராய் நம் வாழ்க்கை நடை போட
நாட்டு நடப்புக்கள் நம் மண்டையை நறை போட
இறத்தக் களரிகள் இதயத்தைத் துளை போட
இங்கிதமற்ற வாழ்க்கை மட்டும் நமை இம்சைப் படுத்துகின்றது!

மனிதா நில்!
இன்றோ நாளையோ உன் உயிரின் கதை முடிந்து போகுமே!
இனிய பொழுதுகளும் சேர்ந்து போகுமே!
இல்லற வாழ்க்கையும் அதனோடே இனைந்து போகுமே!

உன் வாழ்க்கையின் வசந்தங்கள் எங்கே?
வாஞ்சை தந்த வனப்புக்கள் எங்கே?

மரணம் உனை அறவணைக்கு முன் முளங்காளிட்டு உனக்கு வணக்கம் செலுத்தியவன் கூட, நீ கட்டையாய்க் கிடக்கும் போது பிணத்தை இன்னுமா புதைக்கவில்லை எனக் கூறி பின்தள்ளி நின்றுவிடுவான்.
நாட்டு நடப்புக்கள் நமக்கு பாடம் சொல்கின்றன. நாம் தான் மரணத்தை மறந்து விட்டோமே!

கட்டு நோட்டுக்களும்
கடை வாசல்களும்,
காட்டு வாழ்க்கை போல் கசந்து விடு முன்னே
உன் கடந்த காலத்தை அசை போடு!
மீதி வாழ்க்கையை நிறை போடு!

உன் உடலுக்காய்த் தொழும் நாள் வருமுன்
நீயே – உனக்காய்த் தொழுது கொள்!
உதிர்ந்து போகும் உன் வாழ்க்கையை நினைந்து
உன் உதிரா வாழ்க்கைக்காய் உனை வார்த்துக் கொள்!

நாளைய பொழுதுகள் நமக்காய் காத்துக் கிடக்கின்றன
அது – சுட்டெரிக்கும் சுடு நொருப்பா?
இல்லை சுவனத்தின் சுகந்தங்களா?
யாவும் அறிந்தோன் வல்லோன் றஹ்மானே!!

உலக நெருப்பு நமக்குப் புதிதல்ல
உலகையே உருக்கிடும் நெருப்புத்தான் நமக்குப் புதிது!
உன் நிஜங்களை ஒரு முறை நிறுத்துக் கொள்!
போலிகளை அவ்வப்போது கலைந்து கொள்!

கடைசி நாளிகைகள் கண்சிமிட்டும் போது
கண்ணீர் மழைகளெல்லாம் அந்த நெருப்பை அனைக்கமாட்டா!
கபனும், கப்ரும் உனை அழைக்கு முன்
மீண்டும் ஒரு முறை அழுது கொள்!

மலக்குல் மெளத்தும் வரும் முன்னே
மண்ணறை வாழ்க்கைதனைப் பெறு முன்னே
மன நிலை மாற்றி மறுமைக்காய் வாழ்க்கையை வரைவோமே!!

By: Abu Areej


நோன்புப் பெருநாள் தர்மம்

புனிதமான இந்த மாதத்தில் இறைவன் கடமையாக்கிய வணக்கங்களில் ஒன்றுதான் ஸகாதுல் பித்ர் ஆகும். உலோபித்தனத்திலிருந்து மனதை சுத்தப்படுத்தவும், நோன்பாளிக்கு ஏற்படும் தவறுகள், கெட்ட வார்த்தைகள், வீண் விளையாட்டுகளில் இருந்து பரிசுத்தமாகவும், ஏழை, எளியோர்க்கு உதவியாகவும், ரமழான் மாதத்தில் பூரணமாக நோன்பு நோற்று வணக்கங்களை இலகுவாக நிறைவேற்றியதையிட்டு இறைவனுக்கு நன்றியை வெளிப்படுத்தும் நோக்கோடு இறைவன் இதை கடமையாக்கியுள்ளான்.

நோன்பு நோற்றவர் வீணான காரியங்களில் ஈடுபட்டதற்குப் பரிகாரமாகவும், ஏழைகளுக்கு
உணவாகவும் இருக்கும் பொருட்டு நோன்புப் பெருநாள் தர்மத்தை நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் கடமையாக்கினார்கள்.என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(ஆதாரம் அபூதாவுத்)

முஸ்லிமான அடிமைகள், அடிமை அல்லாதவர்கள் ஆண்கள், பெண்கள் அனைவர் மீதும் ஸகாதுல்
பித்ர் கடமையாகும். தனக்கும் தனது குடும்பத்தினருடைய தேவைக்கும் இருப்பதை விட ஒரு
ஸாவு மேலதிகமாக ஒரு முஸ்லிம் வைத்திருந்தால் அவரின் மீது ஸகாதுல் பித்ர் கடமையாகும்.

அடிமைகள்,அடிமைகள் அல்லாதவர்கள், ஆண்கள் பெண்கள், சிறுவர், பெரியோர் ஆகிய அனைத்து
முஸ்லிம்கள் மீதும் நோன்புப் பெருநாள் தர்மத்தை நபிகள் நாயகம் கடமையாக்கினார்கள்.
பேரீச்சம் பழம், தீட்டப்படாத கோதுமை ஆகியவற்றிலிருந்து ஒரு “ஸாவு” எனவும் நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள். மேலும் (பெருநாள்) தொழுகைக்கு மக்கள்
புறப்படுவதற்கு முன்பே அதை வழங்கி விட வேண்டும் எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பாளர் இப்னு உமர் (ஆதாரம்: புகாரி முஸ்லிம்)

உணவிலிருந்து அல்லது பேரீச்சம் பழம், கோதுமை பாலாடைக் கட்டி, போன்றவற்றிலிருந்து ஒரு
ஸாவு நோன்புப் பெருநாள் தர்மமாக நபி (ஸல்) அவர்கள் காலத்தில் கொடுத்து வந்தோம்.

இன்னுமொரு அறிவிப்பில் அன்றைய உணவு கோதுமை, உலர்ந்த திராட்சை, பாலாடைக் கட்டி,
பேரீச்சம் பழம் ஆகியவையாகும்.

மேற்குறிப்பிட்ட உணவு வகைகளில் சிறந்த பிரயோசனமுள்ள உணவுகளை ஏழை, எளியோர்க்கு
கொடுப்பது ஒரு முஸ்லிமின் கடமையாகும்.

நீங்கள் நேசிக்கும் பொருட்களிலிருந்து தானம் செய்யாதவரை நீங்கள் நன்மையடைய
மாட்டீர்கள். எந்தப் பொருளை நீங்கள் செலவு செய்தாலும், நிச்சயமாக அல்லாஹ் அதை
நன்கறிந்தவனாக இருக்கிறான்.

அபீ சயீத் அல் குத்ரி (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸில் கூறப்பட்ட உணவு வகைகள்
அல்லாமல் இன்று மக்கள் உணவாக கருதக் கூடிய அரிசி போன்றவற்றை ஸகாதுல் பித்ராக
கொடுத்தால் அது ஆகுமானது என சில மார்க்க அறிஞர்கள் இப்னு தைமியா, இப்னுல் கையும்
போன்றோர் கூறுகின்றனர்.

ஸகாதுல் பித்ர் விடயத்தில் “ஸாவு” என்பது நான்கு முத்துகளாகும். முத்து என்றால்
நடுத்தரமான ஒரு மனிதனின் இரண்டு கைகளை இணைத்து சிறந்த கோதுமை போன்றவைகளை நிறைத்து
எடுப்பதாகும்.

நோன்புப் பெருநாள் தர்மத்தை வழங்க இரண்டு நேரங்கள் உள்ளன:

1- பெருநாள் இரவு சூரியன் மறைந்ததிலிருந்து ஆரம்பமாகின்றது. அதிலே மிகச் சிறந்தது
பஜ்ர் தொழுகைக்கும், பெருநாள் தொழுகைக்கும் இடைப்பட்ட நேரம். இப்னு உமர் (ரலி)
அவர்கள் அறிவிக்கும் ஒரு ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் ஸகாதுல் பித்ரை
கடமையாக்கினார்கள். மேலும் பெருநாள் தொழுகைக்கு மக்கள் செல்வதற்கு முன் அதை கொடுத்து
விடுமாறும் ஏவினார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. (ஆதாரம் புகாரி)

2- அனுமதிக்கப்பட்ட நேரம்: இந்த நேரம் பெருநாள் தினத்திற்கு ஒரு நாள் அல்லது இரண்டு
நாட்களுக்கு முன்பாகும்.

ஸகாதுல் பித்ரை பெறத் தகுதியானவர்களுக்கு இப்னு உமர் (ரலி) அவர்கள் கொடுத்தார்கள்.
மேலும் பெருநாள் தினத்திற்கு இரண்டு, மூன்று நாட்களுக்கு முன்பும்
கொடுப்பவர்களாகவும் இருந்தார்கள்.

பெருநாள் தொழுகைக்கு முன்பு யார் அதை வழங்கிவிடுகிறாரோ அது ஏற்றுக் கொள்ளப்பட்ட
தர்மமாகும். யார் அதை தொழுகைக்குப் பின் வழங்கிறாரோ அது பொதுவான ஸதகாவாகும். என நபி
(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஆறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ்
(ஆதாரம்:அபு தாவுத்)

பெருநாள் தொழுகை முடியும் வரை பிற்படுத்தினால் அது களாவாகும். அதாவது அதை மீண்டும்
திருப்பிக் கொடுக்க வேண்டும். நேரம் முடிந்து விட்டதனால் அந்தக் கடமை அவரை விட்டும்
நீங்கி விடாது. மேலும் பிற்படுத்தியதனால் அவர் பாவியாவார் என ஷைகுல் இஸ்லாம் இப்னு
தைமிய்யா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

ஏழை, எளியோர்க்கு இந்த தர்மம் கொடுக்கப்பட வேண்டும்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸில் இது ஏழைகளின் உணவு என
குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த தர்மத்தை ஒரு ஜமாஅத்தினரிடமோ அல்லது
குடும்பத்தில் உள்ள அனைவருடைய பங்கையும் ஒரு ஏழைக்கு வழங்குவதோ
அனுமதிக்கப்பட்டுள்ளதாகும். தேவை ஏற்படின் ஒரு ஏழையின் பங்கை பிரித்து பலருக்கு
கொடுப்பதும் ஆகுமானதாகும்.

ஆனால் இந்த தர்மத்தை பணமாக கொடுப்பது ஆகுமானதல்ல. நபி (ஸல்) அவர்கள் காலத்தில் பணம்
கொடுப்பதற்கு வசதி இருந்த போதும் உணவு வகைகளையே நபி (ஸல்) அவர்கள்
குறிப்பிட்டுள்ளார்கள். உணவின் பெறுமதியை கொடுப்பது ஆகுமானதாக இருந்தால் நபி (ஸல்)
அவர்கள் அதை தெளிவுபடுத்தியிருப்பார்கள். காரணம் சட்டங்களை தெளிவு படுத்துவது
அவர்களின் காலத்தில் அவசியமாக இருந்தது. நபி (ஸல்) அவர்களின் காலத்தில் இருந்த
நபித்தோழர்கள் தன்னிடம் வசதி இருந்த போதும் எவரும் இந்த தர்மத்தை பணமாக கொடுத்ததாக
அறியப்படவில்லை. மேலும் பணத்தைக் கொடுப்பது கண்ணியமான இந்த அமலை மறைப்பதாகவும்,
இந்த சட்டங்களை மனிதர்கள் மறந்து போவதாகவும் ஆகிவிடுகிறது.

பெருநாள் தினத்தன்று எந்த ஊரில் இருக்கிறாரோ அங்குள்ள ஏழைகளுக்கு இந்த தர்மத்தை
வழங்க வேண்டும் என்பது அடிப்படையாகும். தர்மம் வழங்கக்கூடியவருடைய ஊரில் இருக்கும் ஏழைகளை விட மிகவும் கஷ்ட நிலையில் அடுத்த ஊரில் இருப்பின் அங்கு கொடுப்பது ஆகுமானதாகும்.


அஷ்ஷேக் அமீன் பின் அப்தல்லாஹ் அஷ்ஷகாவி
தமிழில்: மவ்லவி முஹம்மத் இம்ரான் கபூரி
(அபூ அப்துல் பாசித்)

Thursday, August 25, 2011

தாய் தந்தையரின் முக்கியத்துவம்

“(நபியே!) உமதிறைவன் தன்னைத் தவிர (மற்றெவரையும்) வணங்கக் கூடாதென்றும் (கட்டளையிட்டிருப்பதுடன்) தாய் தந்தைக்கு நன்றி செய்யும்படியாகவும் கட்டளையிட்டிருக்கிறான். (17 :23)

தாய் தந்தையரின் முக்கியத்துவத்தைத் தெளிவாக விளக்கும் மிக ஆழமான வசனம். ஆனால் இன்று மனிதர்களில் பெரும்பாலோரும் ஏன்! ஓர் இறைவனை வணங்கும் நிலையில் முதன்மை தரத்தை உடைய மக்களில் பெரும்பான்மையினோரும் பெற்றோர்கள் விஷயத்தில் தான் தாழ்ந்து நடந்து கொள்கின்றனர். இவ்விசயம் அவர்களை சுவனத்திற்கு செல்லும் நிலையை தடுக்கும் சக்தி கொண்ட மிக முக்கியமான ஒரு அம்சம் என்று அவர்கள் அறியாததினாலே! அல்லது அறிந்தும் அசட்டையாக இருப்பதே!

நம்மைப் போலவே அவர்களும் இளவயதுகளைக் கடந்து இன்று காலத்தின் வேகத்தால் முதுமையை அடைந்திருக்கின்றனர். அவர்களுடைய இளம் வயதில் நம்மை, அதாவது அவர்களுடைய பிள்ளைச் செல்வங்களை நன்றாக வளர்த்து நல்ல ஒரு நிலைக்கு ஆளாக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளையே கொண்டு வாழ்ந்தனர். அவர்களின் முயற்ச்சிக்கு தக்கவாரோ அல்லது கூடுதல், குறைவாகவோ இறைவன் அவர்களுக்கு அருளியதைக் கொண்டு நம்மை வளர்த்து நமது இன்றைய நிலைக்கு முக்கியமான கருப்பொருளாக இருக்கின்றனர். இதை நாம் ஒவ்வொருவரும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

இன்று பெரும்பான்மையோரின் கூற்றுக்களை ஆராய்வோமேயானால் மிகப் பெரும் ஆச்சரியமாக இருக்கும்; அதாவது:-

“எங்களுடைய பெற்றோர்கள் எங்களுக்கு எதையுமே விட்டு வைக்கவில்லை,” அதனால் தான் நாங்கள் இவ்வளவு கஷ்ட்டப்படுகிறோம்”

என்பதே அக்கூற்று இக்கூற்றுக்காரர்கள் ஒரு முக்கியமான விசயத்தை மறந்து விடுகின்றனர். அதாவது இவர்களுடைய பிள்ளைகளும் நாளைக்கு இதே கூற்றைத் தானே மொழிவார்கள்! இதன் பின்னணி என்ன என்பதைக் காண்போம்.

எந்த ஒரு மனிதனாயினும் அவனுடைய முயற்சிகள் அத்தனையும் பிரயோகித்து எப்படியாகிலும் நாம் ஒரு நல்ல நிலையை அதாவது ஒரு வசதியான வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும் என்றே முயற்சி செய்கிறான். அப்படி முயற்சி செய்யும்பொழுது இறைவனின் நாட்டப்படி சிலர் நல்வழியில் சம்பாதித்து முன்னேறுகிறார்கள். சிலர் தீயக் காரியங்களில் முயற்சித்து அந்நிலையை அடைகிறார்கள். சிலர் எந்நிலை முயன்றும், முன்னேறாமல் எப்பவும் போல் ஒரே நிலையில் இருக்கிறார்கள்.

இறைவனின் நாட்டப்படியே அனைத்தும் நடக்கிறது என்பதை அறிகின்ற விசுவாசிகளான மனிதர்கள், மேற்சொன்ன மூன்றாவது நிலையை அடைகின்ற பெற்றோர்கள் எந்நிலையிலும் அவ்வாழ்க்கைக்கு அவர்கள் முழுப் பொறுப்பல்ல என்பதை உணர வேண்டும். இதை மேலும் உணர வேண்டுமாயின் ஒவ்வொருவரும் தத்தமது நிகழ்கால வாழ்க்கையையே உதாரணமாகக் கொள்ளலாம். அதாவது நமது முயற்சி எப்படிப்பட்டது? அதற்காக நாம் செய்கின்ற தியாகங்கள் முதலியன. இதிலிருந்து நாம் எந்த அளவு இன்றைய நிலையில் முயற்சிக்கிறோமோ! அதை போலவே அல்லது அதைவிடக் கூடுதலாகவே நம் பெற்றோர்களும் முயற்சித்து இருக்கலாம். ஆனால் இறைவனின் நாட்டப்படி அவர்களுக்கு உண்டானதை அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். இதை நாம் முற்றிலும் நன்கு ஆராய்ந்து உணர்ந்தவர்களாக பெற்றோர்களை குற்றஞ்சாட்டுவதை முழுமையாக தவிர்க்க வேண்டும். மேலும் இறைவன் நமக்கு அருளிய இவ்வாழ்வில் ஒவ்வொருவருடைய தனிப்பெரும் செயலாகவே பொருளீட்டுவதைக் கொள்ள வேண்டும் என்பதை ஆணித்தரமாக கீழ்கண்ட வசன மூலம் அறிகிறோம்.

“தொழுகை முடிவு பெற்றால், பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக் கொள்ளுங்கள்; நீங்கள் சித்தியடையும் பொருட்டு அடிக்கடி அல்லாஹ்வை நினைவுகூறுங்கள்.” (62:10)

இதை நினைவுகூர்ந்தவர்களாக பெற்றோரை குறை கூறும் தீய வழக்கத்தை மாற்றி, ஒவ்வொருவரும் நல்வழியில் முயற்சி செய்து முன்னேற முயல வேண்டும்.

தாய் தந்தையரிடம் பிள்ளைகள் அன்பாக நடந்து கொள்வது, பின்னவர்களின் இரு உலக வாழ்க்கைக்கும் மிகப் பெரும் வெற்றியை பெற வழிவகுக்கின்றது. பிள்ளைகளின் மேல் வாழ்க்கைக்காக இருவருமே தங்களைக் கூடுமானவரை அர்ப்பணித்திருக்கிறார்கள். இதை உணர்த்தும் விதமாகவே இறைவன்:

“தனது தாய், தந்தை(க்கு நன்றி செய்வது) பற்றி மனிதனுக்கு நாம் நல்லுபதேசம் செய்தோம். அவனுடைய தாய், துன்பத்தின் மேல் துன்பத்தை அனுபவித்து, (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள். (அவன் பிறந்த) பிறகும் இரண்டு வருடங்களுக்கப் பின்னரே அவனுக்கு பால் மறக்கடித்தாள். (ஆகவே. மனிதனே) நீ எனக்கும், உன்னுடைய தாய், தந்தைக்கும் நன்றி செலுத்தி வா, (முடிவில் நீ) என்னிடமே வந்து சேர வேண்டியதிருக்கிறது. (31:14)

இன்று பெரும்பான்மையான இளைஞர்களின் பெற்றோருடைய தொடர்பு மிக ஒரு மோசமான நிலையிலேயே அமைந்துள்ளது. இதற்கு பெற்றோர்களும் முக்கிய காரணமாக அமைகிறார்கள். காரணம், மார்க்க விசயங்களில் அவர்கள் அக்கறை காட்டாததினாலே இந்நிலை அமைகிறது. இறைக் கட்டளைகளை அறிந்து, அதன்படி நடக்க வேண்டும், மேலும் அதில் தான் வெற்றியிருக்கிறது என்று நினைத்து பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளை வளர்த்து இருந்தால், இந்நிலைகளை அடைய வாய்ப்பில்லாமல் போயிருக்கும். இதைத் தவிர்த்துத் தங்களின் மனோ இச்சைகளின்படி இறைவனுடையக் கட்டளைகளை மறந்து அல்லது தங்களுடைய வசதிக்குத் தக்கபடி இறைக்கட்டளைகளை ஏற்று நடக்கும்பொழுது, அவர்கள் வளர்க்கும் பிள்ளைகளும் வாழ்க்கையில் ஒரு பற்றுதல் இல்லாமல் அதாவது மறுமையைப் பற்றிய சிந்தனை சிறிதும் இல்லாமல் ஏதோ வாழ்கிறோம் என்ற நிலைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். இந்நிலைக்குத் தள்ளப்படும் பிள்ளைகள் காலப்போக்கில் தாய் தந்தையரை மதிக்காமல் அசட்டையாகவே வாழ முற்படுகிறார்கள்.

இதை தவிர்க்க வேண்டுமெனில் ஒவ்வொருவரும் இறைக்கட்டளைகளின்படி வாழ முழு முயற்சி செய்தவர்களாக தாங்களும் நல்வழியில் நடந்து தத்தமது பிள்ளைகளையும் அந்நிலையில் வளர்க்க முயற்சி செய்ய வேண்டும். அப்படியே ஏதோ காரணங்களினால் பெற்றோர்களே தவறுகள் செய்திருந்தாலும் (மனித இயல்புத்தானே!) பிள்ளைகள் அவற்றை மறந்து, அவர்களை அறவணைத்து வாழ முற்பட வேண்டும். இது இரு சாரருக்கும் பொருந்தும். தவறு செய்பவர்களிடம் அல்லது செய்தவர்களிடம் நாம் மென்மையாக எடுத்துச் சொல்லி அவர்களின் தவறுகளைக் களைய முயல வேண்டும். நமது தளராத அரவணைப்பால், காலப்போக்கில் அவர்களே தங்களின் தவறுகளை உணர்ந்து நமக்காக வேண்டி இறைவனிடம் பிரார்த்திக்கும் ஒரு நிலைக்கு ஆளாகிவிடுவார்கள்.

நாம் இவ்வுலகில் வாழும் காலமெல்லாம், பெற்றோர்களுக்கு நம்மால் இயன்றவரை உதவிகளை செய்வதை நமது தலையாயக் குறிக்கோளாக கொள்ள வேண்டும். மேலும் அவர்கள் கூறும் நல்ல ஆலோசனைகளை அது இறைக்கட்டளைக்குட்பட்டதாயின் செவியேற்ற அமுல் நடத்த முற்பட வேண்டும். இதன் தராதரத்தை அறியும் விதமாகவே இறைவன் :

தாய் தந்தைக்கு நன்மை செய்யும் விதமாக நாம் மனிதனுக்கு நல்லுபதேசம் செய்திருக்கின்றோம். (எனினும்) நீ அறியாத (எவ்வித ஆதாரமும் இல்லாத)வைகளை எனக்கு இணையாக்குபடி (மனிதனே!) அவர்கள் உன்னை நிர்ப்பந்திப்பதால், (அவ்விஷயத்தில்) நீ அவ்விருவருக்கும் வழிபடாதே! (என்னிடமே) நீங்கள் திரும்ப வேண்டிதிருக்கிறது. நீங்கள் செய்து கொண்டிருந்தவைகளைப் பற்றி அது சமயம் நான் உங்களுக்கு அறிவிப்பேன். (29:8)

மேலும் நபி (ஸல்) கூறுகிறார்கள்.
பெரும்பாவங்களான: அல்லாஹ்வுக்கு இணை வைத்தல், பெற்றோருக்கு இடர் செய்தல், கொலை செய்தல், பொய் சத்தியம் செய்தல் ஆகியவைகளாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். (அப்துல்லாஹ்பின் அம்ரு(ரழி) புகாரீ)

மேற்காண்பவற்றிலிருந்து பெற்றோர்களை அரவணைத்து நடப்பது, நமது இரு உலக வாழ்க்கைக்கு ஒரு முக்கியமான பங்கை வகிக்கிறது என்பதை அறிகிறோம். இதை உணர்ந்தவர்களாக, பெற்றோர்களிடம், அன்பாகவும், கனிவாகவும், மேலும் அவர்களுக்கு வேண்டிய உதவிகளை நம்மால் இயன்றவரை செய்து நமது இரு உலக வாழ்க்கையிலும் வெற்றி பெற்றவர்களாக வாழ சகோதர, சகோதரிகள் முன் வருவார்களாக! அல்லாஹ் உதவி செய்ய போதுமானவன்.

கணவனின் கடமை


கணவன் திருமணத்திற்குப் பிறகு தம் மனைவியுடன் பழகுவதிலும் அவளை நடத்துவதிலும் இஸ்லாம் கற்பிக்கும் நெறி முறைகளைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும். மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகள், அவளுடன் அழகிய முறையில் பழகுவது, அவளைக் கண்ணியமாக நடத்துவது ஆகியவை குறித்து இஸ்லாம் போதிக்கும் நல்லுரைகளை நாம் ஆராய்ந்தால் அவை நம்மை வியப்பில் ஆழ்த்திவிடுகின்றன. இஸ்லாம், பெண்ணின் உரிமைகளைப் பற்றி மிக ஆழமாக உபதேசித்துள்ளது. அவளுக்கு உலகின் எந்த மார்க்கமும் அளித்திராத உயரிய அந்தஸ்தை வழங்கியுள்ளது.

இதோ, அல்லாஹ்வின் தூதர் ஆண்களை எச்சரிக்கிறார்கள்:

“பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள் என உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்! ஏனெனில், பெண், (வளைந்த) விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டுள்ளாள். விலா எலும்பின் மிகக் கோணலான பகுதி அதன் மேல் பகுதியாகும். அதை நீ நிமிர்த்திக் கொண்டே போனால், ஒடித்து விடுவாய். அதை அப்படியே நீ விட்டுவிட்டால் கோணல் உள்ளதாகவே நீடிக்கும். ஆகவே, பெண்கள் விஷயத்தில் உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

“பெண், விலா எலும்பைப் போன்றவள். அவளை நீ நிமிர்த்தினால் ஒடித்து விடுவாய். அவளிடம் நீ இன்பத்தை அடைய நாடினால், அவளிடம் குறையுள்ள நிலையிலேயே இன்பத்தை அடைந்து கொள்வாய்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

“பெண், விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டவள். ஒரே நிலையில் உனக்கு நிலையாக இருக்கமாட்டாள். அவளிடம் நீ இன்பத்தை அடைய நாடினால் அவளிடம் குறையுள்ள நிலையிலேயே இன்பத்தை அடைந்து கொள்வாய்! அவளை நீ நேராக்க முயன்றால் ஒடித்து விடுவாய். அவளை ஒடிப்பது என்பது அவளைத் ‘தலாக்’ விடுவதாகும்.” (ஸஹீஹ் முஸ்லிம்)

இலக்கிய நயமான இந்த உதாரணத்தில் பெண்ணின் இயற்கைத் தன்மைகளையும் பண்புகளையும் மிகத் துல்லியமாக நபி அவர்கள் விவரித்துள்ளார்கள். மனைவி என்பவள் கணவர் விரும்புவது போன்று ஒரே நிலையில் சீராக இருக்கமாட்டாள். அவளிடம் சில கோணலான பண்புகளும் இயல்பாகவே அமைந்திருக்கும். இதைக் கணவர் விளங்கிக் கொள்ள வேண்டும். பூரணமானது அல்லது சரியானது என, தாம் நினைக்கும் முறையில் அவளைத் திருத்திவிட முயலக் கூடாது. பெண்மைக்கென்று அமைந்துள்ள இயற்கைப் பண்புகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அவளை, அல்லாஹ் எந்த இயல்புடன் படைத்தானோ அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும்.

மனைவியின் சில குணங்கள் தமக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக, தாம் விரும்புவது போலவே அவளை மாற்றிட நினைப்பது, ‘விலா எலும்புகள் எதுவும் வளைந்திருக்கக் கூடாது அவற்றை நேராக்கியே தீருவேன்’ என்று நினைப்பது போலாகும். அப்படி நினைத்துச் செயல் பட்டால் அது அந்த எலும்புகளை முறித்து விடுவதில்தான் போய் நிற்கும். அதுபோன்றே ஒரு கணவர் தம் மனைவியை தாம் விரும்பியவாறு சீராக்க நினைப்பதும் விவாகரத்தில்தான் கொண்டுபோய் சேர்த்துவிடும்.

நபி அவர்கள் பெண்ணின் மன நிலைiயும் இயற்கைப் பண்புகளையும் ஆழமாக விளங்கி விவரித்திருக்கிறார்கள். இந்த வழிகாட்டுதலை உள்ளத்தில் ஏற்றுள்ள உண்மை முஸ்லிம், தமது மனைவியின் குறைகளை சகித்துக்கொள்வார். அவளது சிணுங்கல்களைப் பொருட்படுத்த மாட்டார். அதன் மூலம் அவரது இல்லறம் சண்டை, சச்சரவு, வாக்குவாதம், கூச்சல் இல்லாத மகிழ்ச்சி, அமைதி, நிம்மதி நிறைந்த இன்பப் பூங்காவாகத் திகழும்.

சற்றுமுன் கூறப்பட்ட நபிமொழியை ஆய்வு செய்பவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள முடியும். அதாவது நபி அவர்கள், ‘பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள் என நான் உங்களுக்கு உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்’ என்று ஆரம்பித்து, பிறகு அவளது இயல்புகளை விவரிக்கிறார்கள். அதன் பின், மீண்டும் தாம் ஆரம்பித்த முந்தைய வார்த்தையைக் கூறியே முடிக்கிறார்கள். ஆகவே, நபி அவர்கள் பெண்ணுக்கு எந்தளவு முக்கியத்துவம் அளித்துள்ளார்கள் அவளது இயல்பைப் பற்றி எந்தளவு ஆழமாக விளங்கி இருக்கிறார்கள் அவள் மீது எந்தளவு இரக்கம் கொண்டுள்ளார்கள் என்பதைக் கவனியுங்கள்! நபி அவர்களின் இந்த மேலான வழிகாட்டுதல்களை எல்லா நிலைகளிலும் முன்மாதியாக அமைத்து செயல்படுவதைத் தவிர ஓர் உண்மை முஸ்லிமுக்கு வேறு ஏதேனும் வழியுண்டோ!

பெண்களுக்கு மிக முக்கியத்துவம் அளித்ததால்தான் தமது இறுதி ஹஜ்ஜின் பேருரையிலும் பெண்களைப்பற்றி நபி அவர்கள் உபதேசிக்க மறந்துவிடவில்லை. முஸ்லிம்களுக்கு எவற்றையெல்லாம் சொல்ல வேண்டுமோ அவை அனைத்தையும் கூறுவதற்கான கடைசி வாய்ப்பாக இறுதி ஹஜ்ஜுப் பேருரையைப் பயன்படுத்தினார்கள். அந்த உரையின் ஆரம்பமே பெண்களைப் பற்றியதாக அமைந்திருப்பது, அதன் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்துகிறது.

நபி அவர்கள் கூறினார்கள்: “அறிந்து கொள்ளுங்கள்! பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள் என நான் உங்களுக்கு உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்! நிச்சயமாக அவர்கள் உங்களிடத்திலே உதவியாளர்களாகவே இருக்கிறார்கள். அதைத்தவிர வேறெதையும் நீங்கள் உரிமையாக்கிக் கொள்ள முடியாது அவர்கள் பகிரங்கமான மானக்கேடான விஷயங்களில் ஈடுபட்டாலே தவிர! அவ்வாறு அவர்கள் ஈடுபட்டால் படுக்கையிலிருந்து அவர்களை ஒதுக்கி வையுங்கள். அவர்களை காயம் ஏற்படாத வகையில் அடியுங்கள். அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டுவிட்டால் அவர்கள் மீது எந்த மாற்று வழியையும் தேடாதீர்கள். அறிந்து கொள்ளுங்கள்! உங்களுக்கு உங்கள் மனைவியர் மீது சில உரிமைகள் உள்ளன. உங்கள் மனைவியருக்கு உங்கள் மீது சில உரிமைகள் உள்ளன. அவர்கள் மீதான உங்கள் உரிமை என்பது, உங்களுக்கு வெறுப்பானவர் எவரையும் உங்களது விரிப்பை மிதிக்க அனுமதிக்காமல் இருப்பதும், உங்களுக்கு வெறுப்பானவர்களை உங்கள் வீட்டினுள் அனுமதிக்காமல் இருப்பதுமாகும். அறிந்து கொள்ளுங்கள்! உங்கள் மீதான அவர்களுடைய உரிமை என்பது, ஆடையிலும் உணவிலும் நீங்கள் அவர்களுக்கு அழகிய முறையில் நடந்து கொள்வதாகும்.” (ஜாமிவுத் திர்மிதி)

நபியவர்களின் இந்த உபதேசத்தை ஒவ்வொரு உண்மை முஸ்லிமும் நிச்சயமாக செவிமடுப்பார். கணவன், மனைவி இருவரின் உரிமைகள், கடமைகள் குறித்து நபி அவர்கள் எத்துணை நுட்பமாக வழிகாட்டியுள்ளார்கள் என்பதைக் கவனத்தில் கொள்வார். இதில் குறிப்பாக பெண்கள் மீது கருணை, அன்பு காட்டுவது, அவர்களுடன் அழகிய முறையில் நடந்து கொள்வது பற்றி நபி வலியுறுத்தியுள்ளார்கள். ஆகையால், முஸ்லிம்களின் வீடுகளில் பெண்கள் மீது அநீதி இழைக்கப்படுவது அல்லது அவர்களுக்கு இடையூறு செய்யப்படுவதற்கான எவ்வித வாய்ப்பும் அறவே இருக்காது.

பெண்ணைப் பேணுவதைப் பற்றி நபி அவர்கள் கூறிய உபதேசங்கள் ஏராளமானவை. தமது மனைவியிடத்தில் அழகிய முறையில் நடந்து கொள்பவர்தான் இச்சமுதாயத்தின் சிறந்தோர்் ஆக முடியும் என்கிற அளவிற்கு நபி கூறியுள்ளார்கள்.

நபி அவர்கள் கூறினார்கள்: “நம்பிக்கையாளர்களில் நம்பிக்கையில் (ஈமானில்) பரிபூரணமானவர் அவர்களில் மிக அழகிய குணமுடையவரே! உங்களில் சிறந்தோர் உங்கள் மனைவியடத்தில் சிறந்தோரே!”(ஜாமிவுத் திர்மிதி)

இந்த நபிமொழி, நம்பிக்கையாளர் மிக நேர்த்தியான குணத்தைக் கொண்டிருக்க வேண்டும் அந்த குணமில்லாமல் பரிப10ரண நம்பிக்கையை அடைய முடியாது நாம் யாரை நம்மில் சிறந்தவராக கருதுகிறோமோ அவர், தம் மனைவிக்கும் சிறந்தவராக விளங்க வேண்டும் நம்மிடத்தில் சிறந்தவராக இருந்து மனைவியிடத்தில் சிறந்தவராக இல்லையென்றால் உண்மையில் அவர் நம்மில் சிறந்தவரல்லர்’ என்று வலியுறுத்துகிறது.

சில பெண்கள் தங்களுடைய கணவர்களைப்பற்றி முறையிடுவதற்காக நபி அவர்களின் இல்லத்திற்கு வந்தார்கள். அப்போது நபி அவர்கள் ஆண்களின் காதுகளுக்கு எட்டும் விதமாக “முஹம்மதின் குடும்பத்தாரிடம் சில பெண்கள் தங்களது கணவன்மாரைப்பற்றி முறையிட வருகிறார்கள். அந்தக் கணவர்கள் உங்களில் சிறந்தவர்கள் அல்லர்” என்று கூறினார்கள். (ஸுனன்் அபூதாவூத்)

நேரிய மார்க்கமான இஸ்லாம், பெண்ணுக்கு நீதி வழங்குவதிலும் அவளைக் கண்ணியப் படுத்துவதிலும் ஏனைய மார்க்கங்களைப் பார்க்கிலும் மிக உயர்ந்தே நிற்கிறது. அவளைக் கணவன் வெறுத்தாலும் அவளுடன் நல்ல முறையிலேயே நடந்து கொள்ள வேண்டும் என உபதேசிக்கிறது. பெண்கள், தங்களது வரலாற்றில் இஸ்லாமைத் தவிர வேறெங்கும் இந்தக் கண்ணியத்தை அடைந்து கொண்டதே கிடையாது.

மேலும், “அவர்களுடன் (பெண்களுடன்) சிறந்த முறையில் நடந்து கொள்ளுங்கள்! அவர்களை நீங்கள் வெறுத்தபோதிலும் சரியே! ஏனென்றால், நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை வைத்திருக்கலாம்.” (அன்னிஸா 4:19)

இந்த இறைவசனம் உண்மை முஸ்லிமின் உள்ளுணர்வைத் தொட்டுப் பேசுகிறது. அவரது கோபத்தின் கொதிப்பைத் தணிக்கிறது தம் மனைவி மீதான வெறுப்பின் வேகத்தைக் குறைக்கிறது. ஆகவே, இதன் மூலம் மண வளையம் துண்டிக்கப்படுவதிலிருந்து இஸ்லாம் அதைப் பாதுகாக்கிறது. இங்குமங்கும் அலைபாயும் மடத்தனமான எண்ணங்களாலும், மாறிக் கொண்டே இருக்கும் சுபாவத்தினாலும் தூய்மையானத் திருமண உறவில் பங்கம் ஏற்படுவதை விட்டும் கட்டிக்காக்கிறது. தம் மனைவியின் மீது வெறுப்பு ஏற்பட்டு விட்டதால் அவளை விவாகரத்துச் செய்யப் போவதாக கூறிய மனிதருக்கு உமர் (ரழி) அவர்கள் “உனக்கென்ன கேடு! இல்லறம் அன்பின் மீதுதானே அமைக்கப்படுகிறது. அதில், பராமரிப்பும் புறக்கணிப்பும் எப்படி ஒன்று சேர முடியும்?” என்று அறிவுரை கூறினார்கள்.

இஸ்லாமில் திருமண ஒப்பந்தம் என்பது அற்பமான உணர்வுகளின் வெளிப்பாடோ அல்லது இயற்கை ஆசையைத் தணித்து விட்டுப் போவதற்கான வழியோ அல்ல. மாறாக, இதற்கெல்லாம் மேலாகத் தூய்மையானதும் மிகக் கண்ணியமானதுமாகும். உண்மை முஸ்லிமிடம் மனித நேயமும், அறிவும், நற்குணமும், சகிப்புத் தன்மையும், விசாலமான இதயமும் அமைந்திருக்கும். அந்தப் பண்புகள் தமது மனைவியிடம் காணப்படும் வெறுக்கத்தகுந்த குணங்களைச் சகித்துக் கொள்ளும் பக்குவத்தை அவருக்கு அளிக்கும். உண்மை முஸ்லிம் தமது இறைவனின் கட்டளையைப் பின்பற்றுவார். மனைவியின் மீது வெறுப்புள்ளவராக இருந்தாலும் நல்லுறவையே கடைப்பிடிப்பார். தமது இறைவனின் கூற்றுக்கிணங்க தம்மை அமைத்துக் கொள்வார். ஏனென்றால், மனிதன் சில விஷயங்களை வெறுத்து அதிலிருந்து விலகியிருக்க விரும்புகிறான். ஆனால், உண்மையில் அவை நன்மைகளால் சூழப்பட்டதாகவும், நல்லதை உள்ளடக் கியதாகவும் அமைந்திருக்கும்.

எனவே உண்மை முஸ்லிம், எப்படி நேசிக்க வேண்டும், எப்படி வெறுக்க வேண்டும் என்பதையெல்லாம் அறிந்திருப்பார். நேசிப்பவர் மீது குருட்டுத்தனமான நேசத்தைக் கொண்டிருக்கவும் மாட்டார். அதே சமயம், வெறுப்பவர் மீது கல்நெஞ்சம் கொண்ட, பிடிவாதமான, அடிப்படையற்ற கோபத்தையும் வெளிப்படுத்த மாட்டார். நேசிப்பிலும் வெறுப்பிலும் நீதமான நடுநிலையைக் கொண்டிருப்பார்.

“முஸ்லிமான பெண்ணை அவளது கணவர் எவ்வளவுதான் வெறுத்தாலும் அவளிடம் விரும்பத்தகுந்த பல நற்குணங்கள் இருந்தே தீரும். எனவே, அந்தக் கணவர் தமது மனைவியிடம் தமக்கு திருப்தி அளிக்கும் நற்குணங்கள் இருப்பதை மறந்துவிடக் கூடாது. அவளிடம் உள்ள வெறுக்கத்தக்க குணங்களைச் சுட்டிக் காட்டித் திருத்தவும் தவறக்கூடாது” என மகத்தான இறைத்தூதர் அவர்கள் தெளிவு படுத்தினார்கள்.

நபி அவர்கள் கூறினார்கள்: “எந்த ஒரு முஃமினும் (நம்பிக்கையாளரும்) முஃமினான பெண்ணை வெறுக்க வேண்டாம். அவளிடம் ஒரு குணத்தை அவர் வெறுத்தால் மற்றொரு குணத்தைப் பொருந்திக் கொள்வார்.” (ஸஹீஹ் முஸ்லிம்)

”இறை நம்பிக்கை கொண்ட ஓர் ஆண் இறை நம்பிக்கையுள்ள ஒரு பெண்ணை (முழுமையாக) வெறுத்து
ஒதுக்க வேண்டாம். அவளிடமிருந்து அவர் ஒரு குணத்தைவெறுத்தாலும் மற்றொரு குணத்தைக் கண்டு திருப்தி
கொள்ளட்டும்” என நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலீ) நூல்: முஸ்லிம் 2915

உண்ணும் போதும், உடுத்தும் போதும் மனைவியை விட்டு விடாதீர்கள். மனைவியிடம் வெறுப்பை வீட்டிலே
தவிர வேறெங்கும் வெளிப்படுத்தாதீர்கள்.அறிவிப்பாளர்: முஆவியா (ரலி) நூல்: அஹ்மத் 19160

”அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி நீர் எதைச் செலவு செய்தாலும் அதற்காகக் கூலி வழங்கப்படுவீர்.
உமது மனைவியின் வாயில் நீர் ஊட்டும் உணவுஉட்பட” என்று அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஃத் பின் அபீவக்காஸ் (ரலி) நூல்: புகாரி 56

ஒரு மனிதர் நபியவர்களிடம் ”மனைவிக்குக் கணவன் செய்ய வேண்டிய கடமைகள் என்ன?” என்று கேட்டார்
அதற்கு நபி அவர்கள்,’நீ உண்ணும் போதுஅவளுக்கு உணவளிப்பதும் நீ அணியும் போது அவளுக்கு
அணிவிப்பதும் இருப்பதும் வீட்டில் (கண்டிக்கும் போது) முகத்தில் அடிக்காதிருப்பதும் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் தவிர மற்ற இடங்களில் வெறுக்காமல் இருப்பதும் ஆகும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: முஆவியா பின் ஹைதர் (ரலி) நூல்கள்: அபூதாவூத் 1830, அஹ்மத் 19162

”இறை நம்பிக்கை கொண்ட வர்களில் முழுமையான நம்பிக்கை கொண்டவர் அவர்களில் நற்குணம்
கொண்டவரே! உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம்நற்பண்பால் சிறந்து விளங்குபவரே!”
என்று நபி அவரகள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: திர்மதி 1082